எல்லாம் எண்ணங்கள் தானே!

அந்தக் கதைக்குப் பெயர் வச்சாச்சு
‘குமார் அண்ணாவும் நெசனல் லோட்டரியும்’
கதை எப்படி ஆரம்பிக்கிறது, எப்படி முடிகிறது என்பது வரை மனதில் ஒரு பெரிய சித்திரம் வரைந்தாயிற்று. கதையை எந்த வடிவில் சொல்வது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். தோன்றது படியே எழுதிவிட்டேன் என இலகுவாகச் சொல்லிச் சென்றுவிட்டாள். அது அப்படி இல்லப்பா என அவளுக்குப் புரிய வைக்க எனக்குத் தோன்றவுமில்லை. காதலில் மறுதலிப்புக்கு சீனி தடவித் தீத்தத் தெரிந்திருக்க வேண்டும். அது பெருங்கலை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத இருக்கிற கதை. படைப்பிலக்கியம் பற்றிய புரிதல்கள் மேம்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நாம் எழுதியதையே மறுதலிக்க மனம் வாய்த்திருக்கிறது. முன்னரே தொடங்கிய நாவலை எழுதி முடிக்கிற மனமும் கைகூடி இருக்கிறது. இதே மனநிலையில் அமைதியாக ஓரிடத்தில் இருந்து எழுதிக்கொண்டிருக்க வாய்த்தால் எவ்வளவு நல்லது!

சிலவேளைகளில் எதுவுமில்லாமல் தனியே இருப்பதுதான் சிறந்ததோ எனத் தோன்றுவதுமுண்டு. எந்த ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் தனித்து விடப்பட்டிருப்பது. எல்லாவற்றில் இருந்தும் விலகி இருப்பது.

‘அப்பிடி இல்லடாம்பி’ எனச் சொல்லிக்கொண்டு ஆசிரியர் குறுக்கே வருவார். அந்த எண்ணத்தை மறுதலிக்கச் செய்வதே அவருக்கு வேலையாகிப் போயிற்று. வேறு யார், ஜெயமோகன்தான்.

‘குடும்பம், உறவு, அவர்களுக்காக வாழ்வது நமது பண்பாட்டின் நீட்சி. அதை எல்லாம் அறுத்து விட்டால் நீ பெறும் பதர்தான் போ’

அப்போ நாம வெறும் பதராகப் போகத்தானா எண்ணுகிறோம்?
கேள்விகளால் மீண்டும் குழப்பம் தோன்றிவிடும். குழப்பிக்கொண்டிருப்பதே ஆசானுக்கு வேலையாகிப் போச்சு.

மூத்தோன் ஷோபா பற்றி எண்ணிக்கொள்வேன். ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு. எந்த தமிழ் எழுத்தாளனுக்கும் வாய்க்காத வாழ்வு. ஒரு அய்ரோப்பியனாகவே வாழ வாய்த்த வாழ்வு. எண்ணங்கள்தான் இன்னமும் அல்லல்பட்டியில. ஆனால் மனுசன் வேற லெவல். குடும்பம் குட்டி என எந்தக் கக்கிசங்களும் இல்லை. மனிசன் எழுதுறா மனுசன், நடிக்கிறா மனுசன், பறக்கிறா மனுசன். வாழ்றா மனுசன்.
அப்படி இருந்துவிட்டாலே போதும். எண்ணங்கள்தானே எல்லாமும்!

பின்னர் ‘ஐயோ, அது வேணா. இத்தனை வம்பும் வசையும் கொண்ட வாழ்வு யாருக்கு வேணும். கசவறம் பிடித்த வாழ்வு’
ஷோபா நல்லார்கனும் என மனது எப்போதும் எண்ணிக்கொள்ளும்.

எஸ்ராவை சந்திக்கனும் என அய்யூபிடம் சொல்கிறேன். போகலாம் என்கிறான். அய்யூப்தான் எஸ்ராவின் ஆகச் சிறந்த வாசகன் என்பது எனது எண்ணம். எஸ்ராவை கிட்டத்தட்ட முழுவதுமாக வாசித்த ஒருவன். ஆனாலும் அவன் அவரை நெருங்கியதே இல்லை. இதுவரைக்கும் அவன் எஸ்ராவிற்கு ஒரே ஒரு ஈமெயில் தான் எழுதி இருக்கிறான் என்றால் பாருங்களேன். அதுவும் அவனது புத்தகத்தைப் பற்றி நல்லதாக நாலுவார்த்தை அவர் சொன்னதால் எழுதினான். மற்றப்படி அவர் அவனுக்கு ஆசான். பேராசான். அவர்களுக்குள் வேறொன்றுமில்லை.

‘நாம எஸ்ரா போல இருக்கப்பிடாதுடா’ என ஒருமுறை என்னிடம் சொன்னான். நான் காரணங்கேட்கவில்லை. தலையை ஆட்டி வைத்தேன்.

நெடுங்குருதிதான் தமிழ் நாவலின் ஆகச் சிறந்த படைப்பு என்பது நீண்ட நாளாக அவனது எண்ணமாக இருந்தது. பின்னர் அதை அவனே மறுதலித்தான். ‘பெரிய பாய்ச்சல் தான், ஆனால் அதைத் தாண்டிவிட முடியும்’ எனச் சொல்கிறான்.

அய்யூப் ‘எல்லாம் எண்ணங்கள்தானே’ என அடிக்கடி சொல்கிறான். அவனில் இருந்தே விலகி இருக்க முடிவதில்லை. நான் உமையாழை முன்னிலைப் படுத்தவே நாட்டங்கொள்கிறேன். அய்யூப் தன்னை முன்னிறுத்துகிறான்.

எல்லாம் ஒருமாதிரி குழப்பமாகவே இருக்கும். போகன் கவிதைகள் போல. முடிஞ்சா அவரை ஒரு நாவல் எழுதிக்காட்டச் சொல் என அய்யூப் சொல்கிறான். நீயே சொல்லறது என அவனிடம் சொல்கிறேன். போகனால் நாவலே எழுத முடியாது. அதற்கான மனவிரிவு அவரிடமில்லை. அது உனக்குத் தெரியுமா?’ என்கிறான். வம்பு எல்லாம் வம்பு. நமக்கெதுக்கு இந்த பbலாய் எல்லாம்.

இப்படித்தான் குமார் அண்ணாவும் வம்போடுதான் வந்து சேர்ந்தார். ஊர் பலாய் கதைக்கிறதெண்டா அவருக்கு கரும்பு தின்றது போல. மனுசன் கடிச்சுக் குதறிடுவா மனுசன். ஒரே ஒரு பெண்சாதியும், பிள்ளையும். பத்து பொண் வைத்திருப்பவன் கூட இவ்வளவு புகார்களோட இருக்க மாட்டான். அவரது காதல் வெளிப்பாடே குறை சொல்வது போலத்தான் இருக்கும். பாவம் நல்ல மனுசன். வெவரம் பத்தாது. மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதுதான் இப்போ அவருக்கிருக்கிற ஒரே கவலை.

எப்படியாவது அவரை எழுதி விடு என அய்யூப் சொல்லிக்கொண்டே இருக்கிறான். நேரம்தான் வாய்க்க மாட்டேன் என்கிறது என்கிறேன். ஷோபா வந்து, எல்லாவற்றையும் விட்டிட்டு எங்காவது போ என்கிறார். ஜெ வந்து பண்பு பண்பாடு என நீட்டி முழங்குகிறார். எஸ்ரா ஒருமுலையில் இருந்து எழுதிக்காட்டுகிறார்.

போகன் கவிதை எழுத, அல்லது கவிதை போல ஒன்றை எழுத முகநூலைத் திறக்கிறார்.
இலக்கியமும் ஹெயாரும் என சலித்துக் கொண்டே எழுந்து போகிறான் அய்யூப்.
நான் இன்னமும் அங்கேதான் அமர்ந்திருக்கிறேன்.

‘எல்லாமும் எண்ணங்கள் தானே’ மாதா கோவில் மணி போல கணீர் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அந்தக் காலம் மலையேறிப்போனது

கொட்டிக்கிடக்கிற கற்குவியலில் இருந்து மாணிக்கம் தேடுபவர்களின் ஓர்மையோடே ஒரு நல்ல கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தேர்வுசெய்ய வேண்டி இருக்கிறது. கிழக்கிலங்கையின் ஒரு நவீன கவிஞன் சொன்னது- மீன் சந்தையில் கருவாடு மலிந்து கிடப்பதைப் போல கவிதைத் தொகுதிகள் வெளிவருகின்றன. இந்தச் சூழலின் ஆரோக்கியமின்மையை அவ்வப்போது மேலெழுகிற நல்ல கவிதைகளின் மீதான கவனமும் வாசிப்பும்தான்  சமாளித்து சமன்செய்கிறது.

நவீன கவிதைக்கு ஒரு உணர்வுநிலை இருந்தது. சற்றும் மிகையற்ற, பாவனைகளைக் களைந்த, இன்னும் சொல்லப் போனால் கவிதைக்குள் அதுவாக உருவாகிக்கொள்கிற இசைச்தன்மையைக் கூட நிராகரித்து, எந்த அலங்காரங்களும் இல்லாமல் அம்மணமாக நின்று கிளர்ந்து எழுகிற ஒரு தன்மை. காட்சிப் படிமங்கள்தான் கவிதையின் உச்சபட்ச அடைவு என, நவீன கவிஞர்கள் ஒரு நல்ல படிமக் கவிதைக்காக காத்திருந்ததை எல்லாம் வாசித்தறிகிறோம். இவைகள்தான் அந்த உணர்வுநிலையை ஊண்டிச் சொல்கின்றன. புதிய புதிய உவமான உவமேயங்களால் காட்சிப் படிமங்களை உருவாக்கிறவர்களையே நல்ல நவீன தமிழ் கவிஞர்கள் என நான் உள்வாங்கி இருக்கிறேன். என்னுடைய வாசிப்பிற்குட்பட்டு அங்கதத்திற்கு நவீன தமிழ் கவிதை மரபில் ஒரு இடம் உருவாக்கப்பட்டிருக்கவே இல்லை. எந்தளவிற்கென்றால் ஜேர்மனியக் கவிஞர் Gunter Grass யினுடைய Do something என்கிற மிகக் கிண்டலும் கேலியுமாக எழுதப்பட்ட  கவிதையைத் தழுவி எழுதுகிற போதுகூட, ஆத்மாநாம் ‘ஏதாவது செய்’ என மிகத் தீவிரமான கவிதையாத்தான் எழுதி இருப்பார். இப்போது காலம் மாறிவிட்டது. அந்தக் காலம் மலையேறிப் போயிற்று. கவிஞர்களும் மாறிவிட்டார்கள் எனத்தான் தோன்றுகிறது.

கவிதை நுண்மையை நோக்கி நகர்ந்திருக்கிறது என ஜெயமோகன் அடிக்கடி சொல்கிறார். அப்போதெல்லாம் கவிதையில் என்ன பெரிய நுண்மை என அலட்டிக்கொள்ளத் தோன்றும்!

அந்தக் காலம் மலையேறிப்போனது என்கிற கவிஞர் இசையின் கவிதைத் தொகுதியின் முதலாவது கவிதையை நல்ல சகுனத்தோடு ஆரம்பிக்கிறார் கவிஞர். மதுரையில், ஒரு சனிக்கிழமை நல்லிரவில் டாஸ்மார்க்கில்
முட்டக் குடித்துவிட்டு டோக் நகருக்குப் போகிற ஒரு கவிஞனுக்கும், அங்கே வீதியில் நின்றிருக்கிற ஒரு மின்கம்பத்துக்குமான பல்லாண்டு கால பந்தம்தான் கவிதை. கவிதையின் ஒவ்வொரு வரியிலும் கட்டவிழ்கிற செய்தி, ‘ஓ, அப்போ அது இல்லையா?’ என்கிற கேள்வியோடு சிறிய நகைப்பையும் உண்டு பன்னியதைத் தவிர்க்க முடியவில்லை. பைக் ஓட்டிப் போவதாக நினைத்து வெறுங்கையை முறுக்கிக்கொண்டு போகிற ஒரு ‘பெருங்கவியை’ கற்பனை செய்தல் அவ்வளவு நகைப்புக்குரியதாக மாறி இருக்கிறது. முட்டும் போதுதான், மின்கம்பம் 60பாகையால் சாய்ந்து ‘பார்த்துப் போ கவிஞனே’ என வழி விடுகிறது. இந்த முழுக் கவிதையும் ஒரு காட்சியாக விரிந்ததுதான் கவிதையின் வெற்றி. இதையெல்லாம் கவிதையாக எப்படி எழுதுகிறார்கள் என்றிருக்கிறது! பின்னர் இதை எவ்வளவு நுணுக்கமாக கவிதையாக்கி இருக்கிறார் கவிஞர் என ஆச்சரியமாக இருந்தது. மேலும் கூர்மையாக அவதானிக்கையில் இந்தக் கவிதைக்குள் ஒரு சுய எள்ளல் இருப்பதுவும் அது மற்றவரையும் சீண்டப் போதுமாக இருப்பதுவும் தெளிவாகிறது. இந்தத் ‘திறந்த’ தன்மைதான் இன்றைய கவிஞனை வரையறுக்கிறது என நான் புரிந்துகொள்கிறேன்.

ஒரு காதல் ஜோடி நெருக்கமாக இருந்துகொண்டு  பைக்கில் போவது இன்றைய கவிஞனை என்ன மாதிரியாக சஞ்லப்படுத்துகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தத் தொகுதியின் முன்னுரையில் ஒரு இடத்தில் “இளங்காதல் சோடிகள் பைக்குகளில் கட்டிக்கொண்டு பறக்கின்றன. கடவுளின் ஆசீர்வாதம் அந்த பைக்குகளில் மேல் இறங்கியிருக்கிறது. அது ஒரு பாதகமில்லை. உன் காதலி உன்னை இன்புறுத்துகிறாள். இதில் எனக்கென்ன இருக்கிறது? ஆனாலும் தம்பி, அவள் குழற்கட்டு அவிழ்ந்து அது காற்றில் அலையாமல் பார்த்துக்கொள்ள முடியுமா, ப்ளீஸ்..?” என எழுதி இருக்கிறார். அந்தக் கூற்றின் கூறல் முறையே ஆச்சரியமாக இருந்தது. மூன்றாம் நபருக்குச் சொல்வதாக ஆரம்பித்து, ‘உன் காதலி..’ என முன்னிலையிற்குத் தாவி, ப்ளீஸ் என்கிற கெஞ்சலோடு முடிகிற இந்த வசன அமைப்பின் ஒழுங்கின்மைதான் இசையின் இந்தத் தொகுதியின் முழுக் கவிதைகளையும் வாசிக்கத் தூண்டியது. இந்தக் கவிதைத் தொகுதி முடிவை நெருங்குகையில் உள்ள ‘லூஸ்ஹேருக்கு மயங்குதல் அல்லது காமம் செப்பாது கண்டது மொழிதல்’ என்ற தலைப்பிலான கவிதையை இசையின் முன்னுரையின் மேற்சொன்ன பகுதியோடுதான் சேர்த்து வாசிக்க வேண்டும். இந்தத் தலைப்பில் லூஸ்ஹேரையும், பெண்களின் கூந்தலுக்கு நறுமணமுண்டா என வினவிய மன்னன் வாக்கான காமம் செப்பாது கண்டது மொழிதலையும் இணைத்ததும் கூட தற்செயலானதல்ல. ‘லூஸ்ஹேரில் பர லூஸ்ஹேர் என்றோன்றில்லை’ என்பது இசையினுடைய நிலைப்பாடு. எல்லாம் பெண்கள்தானே என்பது சாதியம் தாண்டியது. அந்த வேறுபாடு நம் கவிஞருக்கும் இல்லை. அவருக்கு அவரது உடலை கருவண்டுக் கூட்டமாக்கி ஒவ்வொரு லூஸ்ஹேருக்கும் பின்னாலும் அலைபாய விடுகிற மனது வாய்த்திருக்கிறது. அதனால்தான் அவர் கவிஞராக இருக்கிறார்.

இந்தத் தொகுதிக்கு ரோகினி வரைந்திருக்கிற அட்டைப்படத்தில் லூஸ்ஹெயாரில் தூக்கிட்டுச் செத்துப் போகிற ஒருவனின் படம் அவ்வளவு நேர்த்தியாக, பொருத்தமாக இருக்கிறது.

இந்த வாழ்க்கையை நகர்த்துவது எவ்வளவு கடினமானது! பொறுப்புகளால் முழி பிதுங்கி வழிகிற இந்த வாழ்க்கையை ‘ஓடுகிறது, பாய்கிறது’ என்றெல்லாம் விழிக்காமல், ‘நகர்கிறது’ என முதன்முதலில் சொன்னவனின் காலில் விழத் தோன்றுவது இயல்புதான். ஆனால் கவிஞர், ‘வாழ்க்கையை நகர்த்துவது..’ என்கிற கவிதையில்
‘சாமீ,
இது துள்ளவே துள்ளாதா
வானத்துக்கும் பூமிக்குமாய் வேண்டாமப்பா
ஒரு தவளையைப் போலவேணும் துள்ளாதா?’ 
என ஆரம்பிப்பதில் உள்ள இரைச்சல் அவ்வளவு வலி நிறைந்தது. அந்த வரிகள் ஒரு மீனின் சிறு ‘துள்ளலளவே ஆன பெயர்’ என்கிற கல்பட்டா நாராயணனின் வரியொன்றை ஏனோ ஞாபகப்படுத்தியது. இப்படி சட்டென ஒட்டிக்கொள்கிற வரிகள் கவிதைகளின் பெருஞ்சொத்து.

இந்த வாழ்வின் அபத்தங்களில் நெடுவெங்கோடையும், மின்தடையும் பங்காளிகள் என்பதை
‘பதினொரு ஆண்டுகள் கழித்து
மின்சாரம் வந்திருக்கிறது
நண்பா
அந்த ஃபேனை 20-இல் வை!’
என்பதில் மிகையாய் எழுந்து தெரிகிறது. அந்த மிகைதான் இந்த வாழ்க்கை மீதான வழக்குகளாக இசையின் கவிதைகளில் பதிவாகின்றன. மேலும் அது ஒன்றும் பெரிய விடயமே இல்லை என்பதைப்  போல எப்படி இந்தக் கவிதைகள் லகுவாக நகர்கிறது! இசை பூங்கொத்துகளைக் கையில் வைத்துக்கொண்டு புரட்சிசெய்கிற ஒரு பெரும் புரட்சியாளனாகத் தோன்றுகிறார்.

‘மன்னவன் வந்தானடி தோழி’ என்கிற கவிதை. நடிப்பிசைக் கதைக்கடவுளான’ நாச்சிமுத்துவை கொலைக்குற்றத்துக்காக சிறையில் அடைத்தது பற்றிய கவிதை. ஒரு கதைபோல விரிகிற கவிதையின் சூட்சுமம்தான் நமக்கு பிடிபடவில்லை. ஒருவேளை இதுதான் ஜெயமோகன் சொல்கிற நுண்கவிதையோ என கடக்கப் பார்க்கிறேன். மேலும், இதைக் கதையாகவே எழுதி இருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்னவோ!

கவிதையாகயன்றி வேறேதாகவும் எழுதி விட முடிந்த ஒன்றுக்கு கவிதையின் அவசியம் என்ன இருக்கிறது என எஸ்ரா ஃபௌன்ட், டி எஸ் எலியட்டைக் கேட்ட கேள்வியை இங்கே நியாபகப்படுத்திக்கொள்கிறேன்.

கவிஞர்களுடைய மனது பற்றிய பிரமான்டமான கதைகள் உலக அளவில் பேச்சிலும் எழுத்திலும் கிடைக்கிறது. தற்கொலை செய்துகொள்கிற கவிஞர்களை ஏதோ ஒருவகையில் இந்த உலகம் கொண்டாடி மற்றவர்களையும் தூண்டி விடுகிறதோ என நான் எண்ணுவதுமுண்டு. இசையின் அரூப விரல் என்கிற கவிதை எனக்குள் ஏற்படுத்திய தோற்றங்களை தனியே பின்னர் எழுத வேண்டும். இவ்வளவிற்கும், அது ஒன்றும் பெரிய மகத்தான கவிதை என்று சொல்லிவிட முடியாது. மகத்தான கவிதைக்கென தனியான வரையறைகள் உண்டா என்ன? அவரவரளவில் அந்த மகத்துவம் வேறுபடாதா!  வாசகனைத் தூண்டி, வாசகனால் உணரப்படுவதுதானே நல்ல கவிதை!
இசை எழுதுகிறார்,

அப்போது என் முன்னே
இரண்டு விரல்கள் நீட்டப்பட்டன.
ஒன்று கொலை
மற்றொன்று தற்கொலை
நான் இரண்டுக்கும் நடுவே நீண்டிருந்த
அந்த அரூப விரலைப் பற்றினேன்.
இந்த வரிகளை
அந்த விரல்கொண்டே எழுதுகிறேன்.

வாசித்து முடிக்கையில் மகத்துவத்தின் வரையறைகளை சற்றே மாற்றி எழுதிக்கொள்கிறேன்.

துயரத்தின் கழுத்துச் சதை மார்பில் துவள்கிறது என ஒரு கவிதைக்குத் தலைப்பு.  சிரித்து மாண்ட கவிதை. சமோசாக் கடைக்காரனை கவிஞர் கோவப்படும் இடமெல்லாம் அல்டிமேட்.
‘ஒரு டயட்டை மெய்ன்டைன் பன்னுவது எவ்வளவு சிரமம்!’ சமோசாக் கடைக்காரனை எல்லாம் வைய வேண்டி இருக்கிறது எனச் சொல்லிக்கொண்டேன்.

இப்படியாக இந்த தொகுதியில் உள்ள கவிதைகளை எந்தவகையில் வகைப்படுத்துவது என்று குழம்பி நிற்கிறேன். ஜெயமோகன் சொல்வதைப்போல அட இருந்துட்டு போகட்டும் என்று சொல்லத்தான் தோன்றுகிறது.

இன்றைக்கு கவிதை எழுதுபவர்கள் குறிப்பாக தமிழில் கவிதை எழுதுபவர்கள் இசை போன்ற கவிஞர்களைத் தான் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டி இருக்கிறது. தமிழ் கவிதையின் போக்கை ஆராய்பவர்களுக்கு தமிழ் கவிதை கடந்து வந்த பாதை காட்டுகிற மிக முக்கியமான செய்தி கவிதையில் நடந்த மாற்றங்களாகத்தான் இருக்க முடியும். மரபுக் கவிதையிலிருந்து உரைநடைக் கவிதை பிறகு அங்கிருந்து நவீன கவிதை பிறகு பின்நவீனத்துவம் என ஏதேதோ முயன்று கொண்டிருந்தார்கள்.  அப்புறம் இன்றைக்கு என்ன என்கிற ஒரு கேள்வியில் இப்போதும் நாங்கள் வந்து முட்டி நிற்கிறோம். தொடர்ந்தும் கவிதையில் காட்சிகளை மட்டுமே முன்வைக்கிற படிமங்களுக்காக காத்திருப்பது இன்றைக்கு நாட்பட்டு போயிற்று. இசையின் மொழியில் அந்தக் காலம் மலையேறிப் போனது. இப்போது நாங்கள் மிக மிக நுண்மையான விடயங்களை மிக லகுவாக பேசவேண்டியிருக்கிறது. பேசத் துணியாத அல்லது இதையெல்லாம் பேச வேண்டுமா என்கிற விடயங்களைத் தான் பேசவேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் மெல்லிய சீண்டலோடு, நையாண்டி செய்ய வேண்டி இருக்கிறது. சத்தம் போடாதே என்பதை சத்தம் போடாமலே சொல்லப் பழக வேண்டி இருக்கிறது. அதற்கான ஊடகமாக கவிதையை மாற்ற வேண்டி இருக்கிறது. அதற்கு இப்படியாக இசையினுடைய அலட்டல் இல்லாத இந்த மொழி தான் சரியாக வாய்த்திருக்கிறது எனத் தோன்றுகிறது. ஆகேவேதான் சொல்கிறோம், புதிதாக கவிதை எழுத வருபவர்கள் இசை போன்ற கவிஞர்களை தான் முன்னோடிகளாக ஏற்று பின்பற்ற வேண்டும்.

சொல்லரசியல்

சொற்கள் மிக வலிமையானவை என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நல்லிணக்கம் என்கிற பெயரில் அவர்கள் தீண்டுவது வடுக்களைத்தான்.

முஸ்லிம் ஊர்காவற் படை அல்லது இஸ்லாமிய ஊர்காவற்படை-
இதுதான் அவர்களது சொல்லாட்சி. அன்டன் பாலசிங்கத்திடம் பாடம் பயின்றவர்கள்.
‘இஸ்லாமியர்கள் ஒரு சிறிய இனக்குழு’ எனச் சொல்கிற திராணி, இஸ்லாமியர்கள் ஒரு தேசிய இனமல்ல என்கிற அன்டனின் வன்மத்தின் ஓர்மம், அதன் ஒத்த சொல்தான் இஸ்லாமிய ஊர்காவற்படை.

ஊர்காவற்படையில் இருந்த சில இஸ்லாமியர்கள் என்பதுதான் நல்லிணக்கத்தை விரும்புகிறவர்களின் சரியான சொல்லாடலாக இருக்க முடியும். அதை இஸ்லாமிய ஊர்காவற்படை என மொத்த முஸ்லிம்களையும் பொறுப்பாக்குகிற தன்மைக்கெதிராகத்தான் போராட வேண்டி இருக்கிறது.
Islamic terrorism என்கிற சர்வதேசப் பொதுமைப்படுத்தலின் தேசிய வடிவம்தான் இஸ்லாமிய ஊர்காவற்படை.
இதன் விளைவுகள் மனித மனங்களில் செயற்படுகிற முறைமை, நீண்ட கால அடிப்படையில் மிக ஆபத்தானதொன்று. வெறுப்பு எப்படி மனிதமனங்களை நிரப்புகிறது என்பதை படித்தறிந்தவர்கள், இதுகுறித்து பதற்றமடைய வேண்டி இருக்கிறது. அதற்காகத்தான் இவற்றை கவனங்கொண்டு எதிர்க்க வேண்டி இருக்கிறது.

பட்டியல் போடுகிறார்கள். நல்லதுதான், கிழக்கில் தமிழ் மக்கள் மீது நிகழ்ந்த அட்டூழியங்கள் குறித்து அவர்களது பட்டியலைவிட நீண்ட பட்டியலும் இன்னும் தெளிவான ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது. நடந்த காலங்களிலேயே தொகுக்கப்பட்ட ஆதாரங்கள். ஒவ்வொரு சம்பவத்திலும் எத்தனை சிங்கள இளைஞர்கள் அந்த ஊர்காவற்படையில் இருந்தார்கள் என்கிற தகவல்கள் உட்பட. எத்தனை முஸ்லிம்கள் ஒவ்வொரு சம்பவத்திலும் இறந்தார்கள் என்பது உட்பட.

மேலும், கிழக்கில் புலிகள் கோலோச்ச முன்னர் ஈரோஸும், ஈபிஆர்எல்எப்மும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த போது, அந்தக் குழுக்களில் எத்தனை முஸ்லிம் இளைஞர்கள் முன்னின்று போராடினார்கள் என்கிற தகவலை, இப்படிப் பட்டியல் போடுபவர்கள் நயமாக மறந்து அல்லது மறைத்து விடுகிறார்கள். எங்கே பிழைத்தது என்பதை பேச முனைவாரில்லை. கிழக்குப் பற்றி பேசுகிற போது மட்டும் தலை மறைக்கப்பட்டு வால் மட்டும் காட்டப்படும். எவ்வளவு லாவகமானது அது.

தெளிவிற்காக ஒரு சம்பவம்:
அக்கரைப்பற்று பழைய பொலிஸ் வீதியில் தங்கத் தட்டான் கடை வச்சிருந்த ஆசாரி அழகையா 1990/91 களில் ஊர்காவல்படையால் அடித்து இம்சிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட போது, அந்த வீதியில் வசித்த ஐம்பது வயதான தக்குவா உம்மா பாய்ந்து போய் அவர்களை தடுத்த போது, ஊர்காவல் படையில் இருந்த ஒரு இளைஞன் ‘பலயான், ஹுத்தோ எனச் சொல்லி, சுட்ட வெயில் காலுக்கடியில் புழுதி கிளப்பி இருக்கிறது. அதையும் மீறிக் தடுத்த மனுசியை எட்டி உதைத்து விட்டுத்தான் அழகையாவைக் கொலை செய்தார்கள்.

இப்போது சத்தமாகச் சொல்லுங்கள் தோழர்- “இஸ்லாமிய ஊர்காவல்படை”
00

வெறுப்பரசியலும் இனப்படுகொலைகளும்

மக்கள் மனதில் விதைக்கப்படுகிற வெறுப்புத்தான் கூட்டுப்படுகொலைகளுக்கு அல்லது இனப்படுகொலைகளுக்கு ஆதாரமாக ஆகிவிடுகிறது. holocaust காலத்தில் யூதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல்கள் இரண்டாவது உலகயுத்தத்தின் முடிவுடன் ஆரம்பித்திருந்தது. யூதர்களின் பக்கமே மொத்த உலகமும் திரண்டிருந்தது. பாலஸ்தீனம் பாவம் பார்த்து ஒண்ட இடங்கொடுக்க, அவர்கள் பிடாறியாகிப் போனது வேறு கதை. ஆனால் யூதர்கள் அந்த நிகழ்வுகள் அரங்கேறிய போது ஐரோப்பா முழுக்க நிராயுதபாணிகளாகத்தான் இருந்தார்கள்.

இந்த நூற்றாண்டில் நமது கண்களுக்கு முன்னால் ஒரு இனமே கொத்துக்கொத்தாகச் செத்து மடிந்த போது, அதற்கான பொறுப்புக்கூறல்கள் பத்து ஆண்டுகளுக்கு அப்புறமும் ஏற்கப்படாது இருப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அவர்களுக்காக போராடித் தோற்று, செத்தழிந்த ஒரு ஆயுதக்குழுவின் தலையீடுகளால் அம்மக்கள் மீதான கவனம் கலைக்கப்பட்டுவிட்டது என ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். புலிகள் இல்லாது போயிருந்தால் முள்ளிவாய்க்கால் நிகழ்வே நடந்திருக்காது எனச் சிங்களவர்கள் சொல்கிற போது அவர்களிடம் பெரிய குற்ற உணரச்சிகள் ஏதும் இல்லை. WW2 யிற்குப் பின்னர், ஐரோப்பிய கிருஸ்தவர்களிடம் உருவாகி இருந்த கனிவு சிங்களவர்களிடம் கடைசிவரை உருவாகி இருக்கவில்லை. காரணம் புலிகளின் அட்டூழியங்களும் அதை வைத்து சிங்களவர்கள் மனதில் உருவாக்கப்பட்ட தமிழர்கள் மீதான மஹா வெறுப்பும்தான். மேலும், ஒரு இனப்படுகொலை நடந்தது பற்றி பல சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அறிதலே இல்லை என்பது முழுப் பூசிக்காயின் பின்பக்கம் சேற்றில் மறைந்து நின்ற கதைதான்.

இஸ்லாமியர் மீதான வெறுப்பரசியல் – பகுதி 01

நான் பெரிதாக அரசியல் குறித்து நீளமாக எழுதுவதில்லை. எப்போதெல்லாம் அப்படியாக எழுதுகிறேனோ, அப்போதெல்லாம் நண்பர்களை இழந்திருக்கிறேன். உண்மைகளை அல்லது எனது புரிதல்களை எழுதுகிற போது என்னைப் பக்கச்சார்பான அவதானி எனவும் அல்லது இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தை உள்ளோனாகவும் காட்ட முனைவார்கள். அது தவிர்க்க முடியாதது. இந்தப் புரிதல்களோடு எஞ்சி இருக்கும் நண்பர்களோடு எனக்கு இணக்கமான நட்பும் வாஞ்சையும் உண்டு. நிற்க!

கடந்த ஐனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் பலரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகப் போட்டி இட்ட சஜித் பிரேமதாசாவை ஆதரித்து முகநூலிலும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்த போது, நான் கோதபாய ராஜபக்சவை ஆதரித்த எனது நிலைப்பாடுகளை விளக்கி எழுதிக்கொண்டிருந்தேன். அது ஒன்றும் கண்மூடித்தனமான ஆதரவோ, இவர்களுக்கெல்லாம் எதிரான நிலைப்பாடு எடுக்கும் மனநிலையோ அல்ல. மாறாக முறையான அவதானிப்பும், இலங்கை அரசியல் மீதான தீர்க்கமான பார்வையும் கொண்ட அறிதல்களின் வெளிப்பாடு அது. அதை என்னால் ஆதாரங்களோடு நியாயப்படுத்திவிட முடியும். இது குறித்து முன்னரும் எழுதி இருக்கிறேன். காலத்தின் தேவைகருதி, மிகச் சுருக்கமான ஒரு அறிமுகத்தை இங்கேயும் பதிவு செய்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கை கண்ட மிக வினைத்திறனான அமைச்சராக சென்ற அரசின் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவை எல்லா அரசியல் தலைவர்களும் சொல்கிறார்கள். அவரது அமைச்சகத்தில் பணிபுரிந்த எல்லா அதிகாரிகளும் முறையான அலுவலக நடைமுறைப் பயிற்சி பெற்று, Lean Concept எனப்படுகிற waste reduction management- வீண் குறைப்பு முகாமைத்துவ நிபுனர்களாக தங்களை உருவகித்துக்கொண்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அடைவதற்கான குறிக்கோள்கள் முறைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டிருந்தன. நீண்ட காலத் திட்ட அடிப்படையில் அவர்கள் பணிசெய்யப் பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வளவும் சம்பிக்க எனும் தனிமனிதன் ஒருவரின் ஆரம்பித்தலில் சாத்தியமான ஒன்றாக இருந்தது.

அரூபம் (சிறுகதை)

திடீரென அவன் ழீன் பால் சாத்தரின் Intimacy பற்றிப் பேச ஆரம்பித்தான். அன்று வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. குளிர்காலத்தின் அந்திப்பொழுது. முற்றாக இருள் கௌவிக் கவிழ்ந்திருந்தது. சூரியன் முறையாக நேரங்காட்டாத குளிர்காலம். கைத்தொலைபேசியை உயிர்ப்பித்து நேரத்தை பார்த்துக்கொண்டேன். மாலை 4:00. ஊரில் சூரியன் இன்னமும் மறைந்திருக்காது. குளிர்கால ஐரோப்பிய சூரியனுக்கு அவசரம். மூன்று மணிக்கெல்லாம் இருள ஆரம்பித்துவிடும். அன்று காலையில் முற்றாகப் பனிப்பெய்திருந்தது. எப்படியும் அரை அங்குல உயரத்திற்காவது எங்கும் பனி உறைந்திருக்க வேண்டும்.  ஒரேநாளில் பனியும் மழையும் சாத்தியம்தான். ஆனால் ஒரேநேரத்தில் அவை இரண்டும் பொழிதல் அபூர்வமான நிகழ்வு. அன்று அந்த அபூர்வம் நிகழ்ந்தது. அபர்டீன் எங்கும் வெள்ளைக் கம்பளம் விரித்தாற்போல பசும்பொன் பனி படர்ந்து, பார்க்கும் கண்களையும் குளிர வைத்தது. நண்பகலில் மழையும் சேர்ந்துகொண்டது. ஊரில், மழை பெய்வதும் வெயில் அடிப்பதும் ஒரேநேரத்தில் நிகழ்ந்தால் நாய்க்கும் நரிக்கும் கலியாணம் என நம்பி இருந்த ஒரு குழந்தைப்பருவம் வாய்த்திருந்தது. இங்கே ஐரோப்பாவில் குழந்தைகள் மழையும் பனியும் ஒருங்கே பெய்வதற்கான நியாயத்தை எங்கனம் சமன் செய்கிறார்களோ!

நின் கூடுகை (சிறுகதை)

பட உதவி – இணையம்

நின் கூடுகை

ஜெனி சமைத்துக் கொண்டிருந்தாள். நான் எனது அறையில் உட்கார்ந்து எப்போதும்போல எழுதிக் கொண்டிருந்தேன். நேற்று நடந்த அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு இந்த அமைதி அசாதாரனமானதுதான் என்றாலும், நிலைமை வேறுமாதிரி இருந்திருந்தால்தான் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.

ஜெனியை நானும் என்னை அவளும் கடந்த இரண்டாண்டுகளாக அறிவோம். ஆதலால் இந்தக் காலை இப்படியாகத்தான் புலரும் என்பதை நான் நிச்சயமாக அறிந்திருந்தேன்.

சுவரில் இருந்த மணிக்கூட்டில் இருந்து குருவி, தலையைநீட்டி ஏழுமுறை கத்தி, மறுபடியும் உள்ளிளுத்துக் கொண்டது. எழுந்து ஜன்னலின் திரைச்சீலையை விலக்கினேன். கோடைகாலச் சூரியன் ஏலவே மேலேறி இருந்தான். மத்திய லண்டன் பரபரக்க ஆரம்பித்திருந்தது. பரிங்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பதினெட்டாவது மாடியின் ஜன்னல் ஓரம் நின்று வெளியை வெறித்துக்கொண்டிருந்தேன். வீதியை மூடிப் பரந்து கிடந்த வெள்ளைத்தாள்களின் மீது பனி பூத்திருந்தது. நீளநீளமாக எட்டங்குலத்தில் நிலத்தில் விழுந்த நிழல்கள், கண்பார்த்திருக்க நீளத்தில் குறுகிக்கொண்டே வருவதை வெறித்துப் பார்த்தது மனது.

ஜெனி, எனக்கான தேநீரை எடுத்து வந்து மேசை மீது வைத்திருந்தாள். பொதி செய்யப்பட்ட அவளது உடமைகள் மூலையில் முடங்கிக் கிடந்தன. நான் தேநீர் கோப்பையை கையில் எடுத்து அருந்த ஆரம்பித்தேன். ஒவ்வொரு மிடறும் உள்ளே இறங்குகிறபோதும் இதுதான் அவள் எனக்குத் தயாரித்த கடைசித் தேநீர் எனும் நினைவு கடலலைபோல மீண்டும் மீண்டும் என் மனதின் கரையை மோதி மோதி நொட்டிக் கொண்டிருந்தது.

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு வந்து இரண்டாண்டுகள் ஆயிற்று. நானும் அவளும் ஒன்றாக இருப்பதென முடிவெடுத்த பத்தாவதுநாள், இதே போன்றதொரு கோடைகாலக் காலையில் இந்த வீட்டில் குடியேறி இருந்தோம். மகிழ்ச்சியான அந்தக் காலையைக் கொண்டாட நான் ஷம்பைன் போத்தலைக் குலுக்கித் திறக்க முயற்சி செய்த அந்தக் கணம்  ஒரு கவிதையின் முத்திரை வரிபோல இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. எனது வலதுகை மதுப்புட்டியை இறுகப் பற்றி இருந்தது. ஜெனி எனது இடதுபுறமாக நின்று என் இடுப்பில் கைவளைத்து, தலைசாய்த்து அவளது தங்கநிறக் கூந்தல் சரிய கண்களெல்லாம் மகிழ்ச்சி பொங்க நின்றிருந்தாள். ஜன்னல் திரைச்சீலை வழி கசிந்த உருகிய மங்கல் சூரியஒளி அவளது செங்கூந்தலுக்குள் நுழைந்து அதன் மூலை முடுக்கெல்லாம் தங்க மூலாம் பூசிக்கொண்டிருந்தது. அவள் எனது இடதுபுறமிருந்து வலதுகைக்கு மாறினாள். ஒரு மேகத்துண்டு மிதப்பதைப் போல அவளது உடல் இடமாறிற்று. நான் அவளையும் அவளது குழந்தைத்தனமான செய்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்றே பெரிய இரண்டு பனித்துளிகள் போன்றஅவளது கண்களில் நீர்கட்டி இருந்தது. ‘ம்ம்?’ என்றேன். ‘என்ன?’ என்பதைப் போல மெல்லிய புருவங்களை உயர்த்தினாள். காத்திருந்ததைப் போல அவளது இடதுகண்ணில் இருந்து முதலாவது கண்ணீர்த்துளி கன்னத்தில் உருண்டது. குவிந்த என் உதடுகள் சூடான அந்தக் கண்ணீர்த்துளியை பத்திரப்படுத்திக் கொள்ள, அவளது கண்களைப் பார்த்தவாறே, ‘கண்ணீர்?’ என்றேன். ‘மகிழ்ச்சியால்’ என்றாள்.  ‘மகிழ்ச்சியில் குழந்தைகளும்கூட அழுமா?’ என்றேன். குழந்தைபோல சிணுங்கி எனது இடதுமார்பில் செல்லமாகக் கடித்தாள். அவளை நகர்த்தி எனக்கு நேர் எதிரே கொண்டு வந்து நிறுத்தினேன். அவள் கண்களை உற்றுப்பார்த்து ‘இந்த மகிழ்ச்சி உன்னில் என்றும் நிலைத்திருக்க என் உயிர்கொண்டு கூடுமான எல்லா முயற்சிகளையும் செய்வேன்’ என அவளுக்கு வாக்கு கொடுத்தேன். அவள் என்னை அணைத்து உதட்டில் முத்தமிட்டாள். உதடுகள் ஒன்றைஒன்று கௌவிக்கிடக்க நீண்ட நெடுநேரம் விட்டகலாத அந்த முத்தத்தை, அவளது மூடிய பனிக்கண்களில் இருந்து தாரைதாரையாக கொட்டிய கண்ணீர் ஈரப்படுத்தி ஆசீர்வதித்தது. எப்போதும்போல எல்லாவற்றையும் அவளே ஆரம்பித்தாள். அவளது உடலின் இளஞ்சூடு என்னிலும் பரவ, இன்னும் பிரிக்கப்படாத புதிய தளவாடங்கள் பார்த்திருக்க, தரையில் மெத்தையை மட்டும் இழுத்துப்போட்டு அதில் மூர்க்கமாகக் கிடந்து புரண்டோம். நாழிகைகள் நகர, சுவருக்கு பூசப்பட்ட புதிய பூச்சின் வாசனை உடன் காமக்கழிவுகளின் வாசனையும் காற்றில் ஏறிக்கலந்து அந்த அறையை நிறைத்துக் கிடந்தது. அவ்வளவு மகிழ்ச்சியான அந்தநாளைப் பற்றி, நான் எழுதிக் கொண்டிருந்த, இன்னும் பெயரிடப்படாத எனது மூன்றாவது நாவலில் எழுதவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

தேநீரின் மிதமான சூடு தொண்டைக்குழிக்குள் அமிர்தமென இறங்கியது. நூறு ஆயுள்களுக்கான தாகத்தை அந்த மிடறுகளுக்கிடையே கடந்து கொண்டிருந்தேன். இறுதி மிடறு பாதரசம்போல கெட்டியாக இருப்பதாகத் தோன்றியது. தொண்டையில் இடறி இறங்கும் தேநீரின் சுவையில் கசப்பேறி இருந்தது.

குருவித்தலை மணிக்கூண்டின் முட்கள் விரைவாகச் சுற்றியது. ஜெனி அவளது பிங்க் நிற பயணப்பெட்டியை எடுத்துவந்து முன்னறையில் வைத்தாள். மிட்டாய் பிடுங்கப்பட்ட குழந்தையின் கண்களில் இருக்கும் ஏக்கத்துடன் அவளைப் பார்த்தேன். என்னால் உணரமட்டுமே முடிந்த அந்தப் பார்வை எனக்கே வெறுப்பைத் தந்தது. எனது பார்வையை தவிர்த்த ஜெனி, வீட்டை ஒருமுறை சுற்றிப்பார்வையை சுழலவிட்டாள்.  கடைசியாக அந்தப்பார்வை என் கண்களில் நிலைகொள்வதை அவளால் தவிர்த்திருக்க முடியவில்லை. வலி நிறைந்த இரண்டு சோடிக்கண்கள் நேர்எதிரே சந்திக்க நேர்வது துர்பாக்கியமானது. நான் அவளது கண்களைத் தவிர்க்க முயன்று தோன்றேன். வலிந்து சிரிக்க முயன்றாள். நானும் முயன்றேன். என்னை நோக்கி வந்தாள். இருவரும் ஆரத்தழுவிக் கொண்டோம். காற்றின் வேகத்தில் இரண்டு மூங்கில்கள் கறடாக உரசிக்கொள்வதைப் போல மொறமொறவென இருந்த அந்தத்தழுவலில் வேறெந்த உணர்ச்சிகளும் இல்லை. அவளை நான் முதன் முறையாகச் சந்தித்தபோதும் இப்படியான ஒரு தழுவலுடன்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அந்தத்தழுவல்தான் எத்தனை கனிவானது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்வின் மிகமோசமான நாளொன்றில் லண்டன் ஈயூஸ்டன் இரயில்நிலைய வளாகத்தில் உள்ள pert a magerயில் கையில் ஒரு கோப்பைக் காப்பியும் கண்ணிறைய கண்ணீருமாக ஒதுங்கி, அடுத்தது என்ன எனத்தெரியாமல் ஒரு மூலையில் நின்றிருந்தபோது அவளாக வந்து பேசினாள்.

‘தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்’

குரல் வந்த திசையில் தலையை உயர்த்திப் பார்த்தேன். என்னைவிட உயரமான ஒரு ஆங்கிலப்பெண் நின்றிருந்தாள். தலைமுடி தங்கநிறத்தில் சுருள்சுருளாக இருந்தது. நீள்வட்ட முகத்தில், பருத்த கண்களும் கூர்மையான நாசியும். எப்போதும் சிரிப்பதுபோல மேல்நோக்கி வளைந்த உதடுகள். நீளமான கழுத்து, ததும்பி நிற்கும் மார்பகங்கள், மெல்லிய இடை, நீண்ட கால்கள். குஞ்சங்கள் தொங்கிய குட்டைப்பாவாடையும் கையில்லா மேற்சட்டையும் அணிந்த ஒரு பேரழகி கைக்குட்டை நீட்டிக்கொண்டு நின்றாள்.

‘உனக்கு இது உபயோகப்படலாம்’

தூய வெள்ளைநிறத்தில் இருந்தது அந்தக் கைக்குட்டை.

‘கவலைப்படாதே, புதிதுதான்’ எனக் கண்களை(ச்)சிமிட்டினாள். ஒரு புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டேன். என்னைப் பார்த்தவள் ஏதோ யோசித்தவளாய் கைகளை விரித்து என்னை அணைத்துக்கொண்டாள். கோடையில் மழைபோல அந்த அணைப்பு எனக்குத் தேவையாக இருந்தது. அன்னியனாக இருந்தாலும் தேவையின்போது அணைத்துக்கொள்ள ஒரு உடலும், சாய்ந்து அழ ஒருதோளும் எப்போதும் பெரும் ஆசுவாசமாக இருக்கிறது. நான் தேம்பி அழ ஆரம்பித்தேன். அவள் என்னை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். அவளின் உடலின் அணுக்கம் செந்தனலில் நீர்தெளித்து விடுவதைப்போல என்னை சாந்தப்படுத்துவதாக இருந்தது. அந்தத் தழுவலில் எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லை. ஆயினும் அது ஒரு தூய உறவின் தொடக்கப் புள்ளியாக இருந்தது.

ணிக்கூட்டின் குருவிதலையை நீட்டி ஒன்பதுமுறை கத்தியது. ஜெனி கையை நீட்டினாள். அதை இறுகப்பற்றிக் குலுக்கினேன். நான்கு குலுக்கல்களுக்குப்பிறகு பிடிதளர்த்தி தன்கையை விடுவித்துக் கொண்டவள், ‘சோ..!’ என்றாள்.

இந்த நாட்டில் எல்லாத் தீர்க்கமான முடிவுகளுக்கும் சற்றேமுன்னர் இந்த ‘சோ’ வந்து இடம்பிடித்துக் கொள்வதை நான் அவதானித்திருக்கிறேன். ஜெனியின் இந்த ‘சோ’விற்கு பின்னால் உள்ள தீர்கமான முடிவு நான் எதிர்பார்த்ததுதான் என்பதால், எந்தவித உணர்ச்சிகளையும் காட்டக்கூடாது என நான் ஏற்கனவே முடிவெடுத்திருந்தேன். அதன் பிரகாரம் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின் பார்வையை விலக்கி ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்தேன். வார்த்தைகளுடனேயே வாழ்பவர்களாக இருந்தாலும், சமயங்களில் எதிரில் நிற்பவரின் கண்களைப் பார்த்துப் பேசுவதற்கான நியாயங்களில் இருந்து தூரமாகிவிடுகிறோம். வார்த்தைகள் அற்று நான் நின்றிருக்க, எப்போதும் எனது இக்கட்டில் முன்வந்து உதவுபவள், இப்போதும் முன்வந்து அந்த வசனத்தை முடித்துவைத்தாள்;

‘சோ, தட்ஸ் இட்!’

நான் தேநீர் கோப்பையை கீழே வைத்து ‘யா, தட்ஸ் இட்?’ என்றேன்.அவளை சந்தித்த முதல் நாளின் ஞாபகங்கள் என்னைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தன.

Pert a magner வெறுமனே ஒரு சான்ட்விச் கடையாக மட்டும் என் ஞாபகத்தில் இருக்கப் போவதில்லை என்பதை அன்று அவள் என்னை அணைத்துக் கொண்டிருக்கையில் நான் அறிந்திருக்கவில்லை. காப்பி ஆறிப்போயிருந்தது. அவ்வளவு நேரமாய் அவள் என்னைத் தழுவிக்கொண்டு நின்றிருந்தாள். அந்த இணக்கமான அணைப்பில் என் இறுக்கங்கள் கண்ணீருடன் கரைந்து போனதுபோல இருந்தது.

‘டு யூ பீல் பெட்டர்?’

‘செர்ட்ன்லி. தங்யூ’

‘குட்’ தலையை சிலுப்பி மீண்டும் ஒருமுறை என்னை அணைத்துக்கொண்டாள்.

‘பைதவே,ஐம் ஜெனி, ஜெனிபர் டார்வின்’

‘ஹாய் ஜெனி, ஐம் ஷர்மிளா. ஜஸ்ட் ஷர்மிளா’ எனச்சொல்லிச் சிரித்தேன். அவள் என்கைகளைப் பற்றிக்கொண்டே ‘நைஸ் மீட்டிங் யூ, ஜஸ்ட் ஷர்மிளா!’ எனக்கிண்டலாகச் சொன்னாள். இருவரும் சேர்ந்து சிரித்தோம். அவளுடைய சிரிப்பு வெண்கலப் பாத்திரத்தில் வெள்ளிக்காசைப் போட்டு ஆட்டியதைப் போல இருந்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் சிரித்ததால், முகத்தின் நரம்புகள் ஒத்துழைக்க மறுத்ததன.

‘நான் உன்னை ஷர்மி என அழைப்பதில் உனக்கேதும் ஆட்சோபனைகள் உண்டா?’எனக்கேட்டாள். உள்ளத்ததால் அழகானவர்கள் பழக இலகுவானவர்களாகி மிகஎளிதாக நெருங்கி வந்துவிடுகிறார்கள். அவர்களிடம் எங்களுக்கு எந்த ஆட்சோபனைகளும் இருப்பதில்லை.

‘இல்லை. நீ அப்படி அழைப்பதில் எனக்கு ஆட்சோபனை இல்லை’

‘நல்லது….ஷர்மி! இந்தப்பெயர் எனது பழைய தோழி ஒருத்தியை எனக்கு ஞாபகப்படுத்துகிறது’. அதைச் சொல்லும்போது அவளது கண்கள் ஒருமுறை தாழ்ந்து எழுந்ததை அவதானித்தேன். அமைதியாக இருந்தோம். ஏதோ ஞாபகம் வந்தவளாய், ‘உனக்கு ஏதாவது சாப்பிட வாங்கட்டுமா?’ எனக் கேட்டுக்கொண்டே என் எதிர் இருக்கையில் வந்தமர்ந்தாள். அவளிடம் இருந்து வந்த மெல்லிய சென்டின் வாசனை அந்த இடத்தை நிரப்பி இருந்தது. அவளது நீளமான கழுத்தில் பச்சை நரம்புகள் தெரிந்தன. அவளது கண்ணில் ஆர்வம் குடிகொண்டிருந்தது. அந்த உயரமான இருக்கையில் கால்மேல் கால்போட்டு அவள் அமர்ந்திருக்க, குஞ்சம் வைத்த அவளது குட்டைப்பாவாடை சற்றே விலகி அவளது வழவழப்பான தொடை தெரிந்தது. நான் ஒரு பெண்ணை ரசிப்பது எனக்கு வினோதமாக இருந்தது.

நாங்கள் சாப்பிட்டு முடிந்து பணம்செலுத்த அவள் பையைத் திறந்தபோது அவளது பைக்குள் Simone de Beauvoir எழுதிய The Second Sex புத்தகம் இருப்பதைக்கண்டு நீ ஒரு ‘பெண்ணியவாதியா’ எனக் கேட்டேன். ‘இல்லை. ஏன் கேட்கிறாய்!’ என அவளது மெல்லிய புருவங்களை கேள்விக்குறி போல வளைத்தாள். ‘இல்லை…Simone யை வாசிக்கிறாய் போல தெரிகிறதே!’ என்றேன். அளவெடுத்து புன்னகைத்தாள். ‘நீ இலக்கியம், கோட்பாடுகள் எல்லாம் வாசிப்பாயா?’ எனத் தொடர்ந்தேன். ‘Simone யை வாசிப்பதால் நான் பெண்ணியவாதியாக இருக்க வேண்டுமென்பதில்லை. உண்மையைச் சொல்வதென்றால் இன்றைய பெண்ணிய கோட்பாடுகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை’.

நான் அமைதியாக இருந்தேன். பின்னர் வாசிப்புப் பற்றி அவளே அரைமணி நேரம் அடைமழை போல விடாது பேசினாள். நானும் கதைகள் எழுதி இருக்கிறேன் என அவளிடம் சொல்வதில் எனக்கு தயக்கங்கள் இருந்தது. ஆனாலும் சொல்வதில் இருந்து என்னால் விலகி இருக்க முடியவில்லை. நான் அதை அவளிடம் சொன்னபோது, கண்கள் அகல ‘அப்படியா! என்னெல்லாம் எழுதி இருக்கிறாய்?   எத்தனை நாவல்கள்? உனது புத்தகங்களை எனக்கு வாசிக்கக் கொடுக்கிறாயா?’  என வந்து விழுந்த தொடர் கேள்விகளால் எங்கிருந்து ஆரம்பிப்பது என நான் சிந்திந்து நிற்க, அவளோ உள்ளங்கையின் சூடு எனது புறங்கையில் தகிக்க எனது கைகளைப்பற்றி இருந்தாள்.

‘ம்ம் .. தருகிறேன். ஆனால் உன்னால் வாசிக்க முடியாதே‘

‘ஏன்?’

‘அவை தமிழில் எழுதப்பட்டவை’

‘அதற்கென்ன? உனது நூலின் மொழிபெயர்ப்பு இல்லையா?’

‘இல்லை! எங்கள் மொழியில் எழுதுவதே பெரிய விடயம். மொழிபெயர்ப்பெல்லாம் சான்ஸே இல்லை’

‘சரி, எத்தனை நாவல் எழுதி இருக்க?’

‘சிறுகதைதான் எனக்கான மார்க்கம். இதுவரையும் இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளியாகி இருக்கின்றன. ஒரு மாறுதலுக்காக மூன்றாவதாக ஒரு நாவலை எழுதும் முயற்ச்சியில் இருக்கிறேன்’

‘அது எதைப்பற்றியது என நான் அறிந்து கொள்ளலாமா?’

‘அது ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை பற்றிப் பேசுகிற கதை’

‘உன் குடும்பக்கதையா?’

‘இருக்கலாம்’

‘நான் அதை வாசிக்கணுமே’ என்றவள், சற்றே யோசித்து ‘ஏன் நீ அதை எனக்காக மொழிபெயர்க்கக் கூடாது?’ என்றாள்.

எனது நாவலை நான் ஜெனியை சந்திப்பதற்கும் ஆறுமாதங்களுக்கு முன்னரே எழுத ஆரம்பித்திருந்தேன். அந்த நாவல் உறவுகளால் ஏமாற்றப்படும் ஒரு பெண் நாவலாசிரியையின் வாழ்வின் துயரைப் பற்றியது. அந்த நாட்களில் நான் இருந்த மனநிலையில் எழுதிய அந்த நாவலின் மூலப்பிரதி பெரும் துயரை அளவுகடந்த நாடகீயத் தன்மையுடன் எழுதியதாக இருந்தது. மூன்று தலைமுறைகள் பின்னோக்கி நகரும் கதையில், பெண் பாத்திரங்களின் வாழ்க்கைமுறை பற்றிய விபரிப்புக்கள் ஒரு பிரமாண்டமான கென்வஸில் வரையப்பட்ட நுணுக்கமான சித்திரத்தைப்போல விவரணமாக எழுதப்பட்டிருக்கும். கூறல்முறை மாறிமாறி அமைந்து, நாவலின் பாத்திரங்கள் அவரவர் நியாயங்களை அவரவரே எடுத்து வைப்பதாக வரும் ஒருபகுதியில் நாவலாசிரியையின் கணவனாக வருபவன் கூறுவதாக இப்படி ஒரு இடமிருக்கும்;

“எல்லா வாசல்களும் மூடப்பட்ட பின்பும், இன்னமும் கதவருகில் காத்திருப்பவள் பற்றி உங்களுக்கு நான் என்ன சொல்வது? அவள் கடந்துவந்த எல்லா வாசல்களுமே இங்கனமே சாத்தப்பட, பாதி திறந்திருந்த என்கதவு வழி கசிந்த கரும்புகையும் அவளுக்கான நம்பிக்கையின் குறியீடாகிப் போகுமளவுக்கு அவளது ஏமாற்றங்கள் மிகைத்திருந்த நாளொன்றில்தான் அவளுக்கான என்வாசலும் சாத்தப்பட்டது. கண்ணாடிக் கதவுகள் அவை. அதன் மறுபுறத்தே நின்று உள்ளே பார்த்துக் கெஞ்சும் அவளது குரல் மட்டும் என்னை எட்டுவதே இல்லை. பைபிளின் பழைய ஏற்பாட்டு எசக்கிள் மன்னனின் ஜெருசலநகரம் போல சிதைந்துபோன அவளது வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இந்தக் காற்றுவெளி எங்கும் நிரம்பிக்கிடக்க, அவள்மீது பரிவுகொண்ட ஒருநாளில் அவளை ஆடுமேய்க்க கூட்டிச் சென்றிருந்தேன். தேர்ந்த இடைச்சி அவள். சுள்ளியை லாவகமாய் விரலிடுக்குகளில் சொருகி கைகளை காற்றில் அசையவிட்டவளின் நளினத்தில் தெறித்ததெல்லாம் பீத்தோவனின் ஒன்பதாம் சிம்போனி இசைக்குறிப்புகள் தாம். கண்களைத் திறந்தபோது இசை மிகஅருகில் இருந்தது பற்றி எண்ணிமுடிக்கையில் அன்புக்குப் பதில் வெறிப்பேறி இருந்தது என் நாடி நரம்பெல்லாம். சூனியக்காரிகளின் சூழ்ச்சி பற்றி நான் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்டதைச் சொன்னபோது அவள் நம்ப மறுத்துவிட்டாள். பின்னர் அவள் நம்பியதை ஏற்க மறுத்துவிட்டாள். பனிக்காலம் தொடங்கி இரண்டு திங்கள் கழிந்தநிலையில் ஆறு கருநிறக்குதிரைகள் பூட்டிய சறுக்குவண்டியில் நெடுந்தூரபயணம் ஒன்றுக்குள் தொலைந்திருத்தோம். ரோமப்பேரரசின் கடைசி மன்னன் நீரோ கட்டுவித்த நாடகமாளிகை ஒன்றை(ப்)பார்க்கச் செல்வதாகத் திட்டம். வழிநெடுகிலும் அவள் வாசித்த ‘பிடில்’ இசை கொண்டு குறியீடாக ஏதோ ஒன்றை அவள் எனக்குணர்த்த வந்ததாகச் சொன்னபோது நான் சிரித்து வைத்தேன். ரோம்நகரம் பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்தான் என்பது பொய்யான செய்தி என்பதை அவளிடம் நான் இன்றுவரைக்கும் சொல்லவே இல்லை. ரோமில் சலிப்புத்தட்டி திரும்பி வருகையில் குளிருக்கிதமாய் தீ மூட்ட சருகுகள் சேகரிக்கச் சென்றபோது உரசிய உடல்களில் இருந்து தெறித்த ஒரு சொட்டுத்தீ அந்த வனாந்தரம் முழுவதும் முனகு ஒலியாய் எதிரொலித்தது. பலவீனங்களை பலமாக்கிக் கொள்ளத் தெரிந்த வித்தைகள் எல்லாம் தோற்று நின்றபோது எழுந்த ஒற்றைவயலின் இசையில் காமத்தின் வாடை. கசிந்த கழிவகற்றி நிமிர்ந்தபோது சூரியன் மேற்கே மறைந்திருந்தான். பனிக்காலச் சூரியன் காலத்தை ஒருபோதும் சரியாகக் காட்டியதில்லை. பனியா மழையா எனத்தெரியாத ஏதோ ஒன்று தொடை நனைத்த போதில் முழிப்பு வந்தது. ஈரப்பிசுபிசுப்புத் தந்த கடுப்பில் படுக்கையை விட்டகல்கையில் சிறகுகள் பிடுங்கப்பட்ட தேவதைகள் சிலர் இன்னமும் என் கதவருகில் குந்திக் கிடந்தார்கள்”

நாவலின் இந்தப் பகுதியை நான் ஜெனியை சந்திப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்னரே எழுதி இருந்தேன். அதன்பிரதி ஒன்று எனது பையில் கனத்துக் கிடந்தது. அதை மொழிபெயர்த்துச் சொல்ல ஆரம்பித்தேன்.

‘கொஞ்சம் பொறு!’ என்றவள் நான் சொல்லச்சொல்ல ஒரு வெள்ளைத்தாளில் எழுத ஆரம்பித்தாள். நான் சொல்லி முடிந்ததும், சரிந்து கிடந்த சுருள்முடியை வாரிக் கூந்தல்கட்டி, பின்னால் எறிந்து, முன்னால் கிடந்த வெள்ளைத்தாளில் எழுதி இருந்ததை ஒவ்வொரு சொல்லாக, வசனமாக கவனமாக வாசித்து எடிட் செய்ய ஆரம்பித்தாள். எழுவாய் பயனிலைகள் இடம்பெயர்ந்தன. கற்றை கற்றையாக சொற்கள் வெட்டி எறியப்பட்டன. நான் சொன்ன பல சொற்களுக்கு ஒரு சொல் பிரதியீடாக மாற்றப்பட்டது.ஒரு சொல் பல சொற்களாகத் திரிந்தது. தாளில் ஒன்னரைப் பக்கங்களுக்கு எழுதப்பட்ட, நான் சொன்ன ஆங்கில மொழிபெயர்ப்பு, ஜெனி கைவைத்த பிறகு ஒரு பக்கத்துக்கும் குறைவாகச் சுருக்கப்பட்டது. எல்லாம் முடிந்ததும் மீண்டும் ஒருமுறை வாசித்தவள், திருப்தி மேலோங்க தலைஆட்டி, பின் அவள் திருத்திய பிரதியை என்னிடம் நீட்டினாள். மொழி கெட்டியாகி, ரசமேறி, ஆங்கில மூலப்பிரதி ஒன்றை வாசிப்பதைப்போல இருந்தது. தமிழில் இருந்த ஓசைநயமும், நாடகீயத்தன்மையும் மொழிபெயர்ப்பிலும் இருந்ததுபோல இருந்தது. ஓரிரு இடங்களில் மட்டும் திருத்தங்கள் சொன்னேன். ஏற்றுக் கொண்டாள். எல்லாம் முடிந்து ஒருமுறை அவள் சத்தமாக எனக்கு வாசித்துக் காட்டியபோது என் கண்களில் நீர்கட்டியது. ‘John Banville யை வாசிப்பதைபோல இருக்கிறது’ என்றேன். ‘எனக்கும் ஐயர்லாந்துதான் பூர்வீகம் என்றாள். பின்னர் மீண்டும் ஒருமுறை வாசித்தாள். ஏதோ திருத்தங்கள் செய்தாள். பின்னர் மீண்டும் வாசித்தாள். தலையை நிமிர்ந்து எனைப்பார்த்தாள். அந்தக் கண்களில் தெளிவிருந்தது. ‘உன்னுடைய எழுத்து செவ்வியல்தன்மை கொண்டது’ என்றாள். பின்னர் செவ்வியல்பு பற்றி பேசினாள். ‘உனது மொழிபெயர்ப்பை எடிட் செய்கிறபோது அதன் அடர்த்தி புரிகிறது என்றாள். இந்த எழுத்தை நிச்சயம் ஆங்கில உலகம் கொண்டாடும். நீ எழுதிய எல்லாவற்றையும் மொழிபெயர்த்து எனக்கு அனுப்பு. நான் எடிட் செய்கிறேன். முடிந்ததும் பதிப்பிப்பதற்கும் நானே பொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். Penguins பதிப்பக இணை இயக்குனர் எனது நண்பர்தான்’ என்று முடித்தாள். எல்லாம் கனவில் நடப்பதைப்போல இருந்தது. ‘உங்கள் தேவையின்போதும் ஊழிக்காலத்தின்போதும், தேவனானவர் உடன் இருக்கிறார்’ எனும் பைபிள் வாசகம் ஞாபகம் வந்தது. இறந்தகாலமும் அது சுமந்த வசைகளும் எண்ணங்களில் தூரநோக்கி நகர்ந்தன. கண்களில் நீர் பெருக்கெடுத்தது. தேம்பி அழ ஆரம்பித்தேன். அழுவதற்கு காரணங்களைச் சொல்ல வேண்டியதில்லை. அழுதால் போதுமானது. அழுதேன். ஜெனி ஏதோ புரிந்ததைப்போல என்னை அணைத்துக் கொண்டாள். அவளது நெற்றி என் நெற்றியோடு முட்டியது. நாசிகள் தொட்டுக் கொண்டன. அவளது உதடுகள் என் உதடுகளை உரசுவதை உணர முடிந்தது.

Euston TravelLodge யில் ஐந்துநாட்கள் தங்கி நாவலில் அதுவரையும் எழுதிய பெரும்பகுதியை இரவுபகலாக மொழிபெயர்த்தேன். ஒவ்வொருநாள் மாலையில் நானும் ஜெனியும் சந்தித்துக்கொள்கிற போது அன்று மொழிபெயர்த்த பகுதிகளை அவளிடம் கொடுப்பேன். வாசிப்பாள். பின்னர் என்னுடைய கையெழுத்தை விதந்து பேசுவாள். என் எழுத்து வசீகரமானது என ஒவ்வொரு தாளைப் புரட்டுகிற போதும் சொல்வாள். பின்னர் இருவரும் சேர்ந்தே எடிட் செய்ய ஆரம்பிப்போம். அவளது வேகத்தில் எனக்கு மூச்சுமுட்டியது. எடிட் செய்து முடித்ததும் அவள் சத்தமாக வாசிக்க ஆரம்பிப்பாள். நல்ல குயவன் கையில் அகப்பட்ட களிமண், உருக்கொள்வதைப் போல என் எழுத்து அவள் கைவைத்த பிறகு உருயேறி இருப்பதாக உணர்ந்தேன். நாவலை எழுதுகிறபோது இருந்த மனநிலை ஆங்கில மொழிபெயர்ப்பின்போது முற்றாக மாறி இருந்தது. ஏதோ யாரோ எழுதிய புதிய ஒரு நாவலை வாசிப்பதைப்போல இருந்தது. நாவலின் கனம் என்னை அழுத்துவதை உணர முடிந்தது. இத்தனை அழுத்தங்களை வாழ்வில் அனுபவித்தேன் எனும் எண்ணம் மனஉளைச்சலை உண்டுபன்னியது. நாவலின் போக்கில் பல இடங்களிலும் ஜெனியும் அழுதாள். ஐந்தாவது நாள் மாலையில் சந்தித்துக் கொள்கிறபோது ‘ஒரு பெண்ணை இப்படி எல்லாம் கொடுமைப்படுத்த முடியுமா?’ என அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாமல் குந்தி இருந்தேன். ‘கீழைத்தேய ஆண்கள் கேவலமானவர்கள். பன்றியிலும் கீழானவர்கள்’ எனச் சொன்னாள். பின்னர் ‘உனது தந்தை எப்படி?’ என்று அவள் கேட்ட கேள்வி எனது சுயத்தைத் தீண்டியது. ‘கீழைத்தேய ஆண்கள் என அப்படிப் பொதுமைப்படுத்த முடியாது இல்லையா?, எல்லா இடங்களிலும் இவ்வாறான ஆண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!’ எனச் சொன்னேன். ‘இருக்கலாம். ஆனால் சிகரட்டால் சூடு வைப்பதெல்லாம் வேறெங்கும் நடக்காது. அப்படிச் செய்பவன் ஒரு மனநோயாளியாக இருக்க வேண்டும்’ என்றாள். எனது வலதுகை, திட்டுத்திட்டாய் இருந்த எனது இடதுகையின் தோள்பட்டையை சுயமற்றுத் தடவியது. நான் அமைதியாக இருந்தேன். எங்களை அமைதி சூழ்ந்துகொண்ட போது அதன் பயங்கரத்தில் இருந்து வெளியேற விரும்பி ‘இது புனைவுதானே! புனைவின் சாத்தியங்களை பரீட்சிக்கும் முயற்சியாக்கூட இருக்கலாம் இல்லையா? ஏன் இவை எல்லாம் உண்மையில் நடந்ததாக நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?’ எனக் கேட்டேன். ‘புனைவு பற்றிய எனது நிலைப்பாடு முற்றிலும் வேறானது ஷர்மி. யதார்த்தவாதப் புனைவில் உயர்வுநவிற்சிகளின் மெய்யான தன்மையை பிரித்தறிதல் தேர்ந்த வாசக மனதிற்கு எளிதானதுதான்’ என்றவள், மௌனமாக என்னை அணைத்துக் கொண்டாள். நான் பதிலற்று, அசைவற்று நின்றேன். என் காதுகளில் மெல்லமாக ‘நான் குழந்தை இல்லை, ஷர்மி. என்னை இப்படி தள்ளி வைக்காதே’ என்றாள். அவளது இளமார்பகங்கள்  என் நெஞ்சில் உருண்டு திரிந்தன. அவள் தன் உதடு கொண்டு என் உதடுகளை உரசினாள்.

அது ஒன்றும் சிக்கலானதாக இருக்கவில்லை. நாங்கள் தடையின்றி முத்தமிட்டுக் கொள்ளும் அளவிற்கு நெருங்கி இருந்தோம். காலம் தண்ணீரும் தண்ணீரும் மோதிக்கொள்வதைப் போல எங்களை அழைக்கழித்தது. ஒன்றாகி, ஒட்டி, பின்னர் விலகி… என்ன என விபரிக்க முடியாத ஏதோ ஒன்றை காலம் எங்களுக்கிடையில் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது. முத்தம் அந்த விளையாட்டின் எச்சமாக பிதுங்கி வழிந்தது. எப்போதும் முத்தமொன்றுக்கான உந்துதல்களை ஜெனியே ஆரம்பித்தாள். எல்லாமும் தயாரானதும், அதற்காகவே காத்திருந்ததைப் போல நான் தலை சாய்த்துக்கொடுப்பேன். ஒரு பசிகொண்ட ஓநாயின் வேட்கை உடன் அவள் என் உதடுகளைக் கௌவுவாள். வாய்வழியே உயிர் உறிஞ்சிக் குடிப்பவள் போல என் கீழுதட்டைக் கடிப்பாள். ஆயினும் அந்த நேரங்களில் ஆழ்ந்த தியானத்தில் இருப்பவளைப்போல அவள் கண்கள் எப்போதும் மூடியே இருக்கும். உடல் சிலிர்க்க அந்த முத்தங்களை நான் அனுபவிக்கப் பழகி இருந்தேன். ஆண்களின் உதடுகள் கௌவிக் கிடந்த நிமிடங்களை எண்ணிப் பார்ப்பேன். ஒரு ஆணின் உதடுகள் இவ்வளவு மென்மையாக ஒருபோதும் இருப்பதில்லை. ஒரு பெண்ணின் ஸ்பரிசம் ஒரு ரோஜா மலரின் இதழ்கள் வருடுவதை விடவும் மென்மையானது என்பதை காமம் முற்றியபோதில், பொதுவெளியில் நின்று, எங்களுக்கிடையில் பரிமாறப்பட்ட முத்தங்கள் எனக்கு உணர்த்தின. என் படைப்பு மனம் பெண் உடல் பற்றிய வியப்பில் தகித்துப் புழுங்கிற்று. முத்தங்கள் அந்தத் தகிப்பின் சூட்டில் நெய்யென இறங்கிற்று. நாசி முறித்து கக்கிய சுவாசத்தின் எச்சம் அனல் காற்றாய் வெளியேறிற்று. இப்படியாகப் பரிமாறப்பட்ட முத்தங்கள் பற்றி உதடுகள் பிரிந்தபின்னர் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. குட்டையில் தேங்கிய ஊற்றுநீர் போல காமம் எங்களை அணைகட்டி நின்றது. இப்படியான ஒருநாளில் கண்கள் அகலவிரிய, சேர்ந்து வாழ்தல் பற்றி பேச ஆரம்பித்தாள் ஜெனி. அதற்கு முன்னர் நான் ஒருபோதும் ஒருபால் உறவில் இருந்ததில்லை. அது பற்றிய எண்ணங்கள்கூட எனக்கிருந்ததில்லை. உண்மையைச் சொல்வதென்றால், ஒருபால் உறவில் காமம் எப்படி கொண்டாட்டமாகும் எனும் ஒரு கேள்வி எனக்கெப்போதும் இருந்தது. ஆகவேதான் ஜெனி உடனான உறவு எனக்கு புதுமையாக இருந்தது. அவள் கொடுத்த முத்தங்கள் ஒரு கனவில் அடைந்த உச்சம் போல இருந்தது. நான் அதை முழுமையாக அனுபவித்தேன். ஜெனியின் கருணையும், அவள் என் எழுத்தின்மேல் கொண்டிருந்த நம்பிக்கைகளும் எனது எழுத்துச் செயற்பாடுகளுக்கு பெரும் ஊக்கியாக இருந்தது. அவளை நிராகரிப்பதற்கான வேறெந்தக் காரணங்களும் இல்லை. ஆயினும், ஒரு பெண்ணுடன் ஒருபால் உறவில் இருத்தல் என்னும் எண்ணமே ஒருவித அச்சத்தை உண்டு பன்னியது. நடுக்கடலில் திக்கற்று நிற்பவள் கைக்குக் கிடைத்த சிறுகுச்சி கரைசேர்க்குமா என்பதைப் பற்றி சிந்திப்பதைப் போல அபத்தம் வேறேதும் இல்லை. நான் ஜெனி உடன் சேர்ந்து வாழ்வதென முடிவு செய்தேன்.  அதைச் சொன்னபோது அவள் மகிழ்ச்சியில் தன் தனங்கள் ததும்ப துள்ளிக்குதித்தாள். இறுக அணைத்துக் கொண்டாள். முத்தமிட்டாள். நான் இன்னமும் சிறுகுச்சியைப் பற்றிக்கொண்டு கடலில் தத்தளிக்கும் திக்கற்றவளது மனநிலையிலேயே நின்றிருந்தேன்.

அன்றிரவு ஜெனி அவளது வீட்டிற்கு என்னை அழைத்துப் போனாள். ஒரு அமாவாசை இரவில் ஒரு பெண்ணுடலின் தேடலின் சாத்தியங்கள் அனைத்தையும் என்னில் அரங்கேற்றிக் காட்டினாள். அது வேறொரு உலகம். ஆனால் நிச்சயமாக அந்த உலகத்தை ஒரு ஆணால் ஒரு பெண்ணிற்கு காட்டிவிடவே முடியாது. கண்களைக் கட்டி, நிலத்தில் கிடத்தி, கறடான ஒரு குகைவழியில் சீறுகீறல்கூட இல்லாமல் ஒரு பெண்ணை இழுத்துச் செல்ல, பெண்ணுடலில் வாழும் இன்னொரு பெண்ணால் மட்டுமே முடியும்.

தெகிட்டத் தெகிட்ட காமம் பயின்ற இரவு அது. உச்சம் பலமுறை தலையில் அடித்து, பித்துக் கலங்கி, அண்ட சராசரமும் ஆண்டொழுகி, சர்வமும் அடங்கி வெற்றுடலாய் கைகால்கள் விரிந்து மல்லாந்து கிடக்கையில்,  அருகில் கிடக்கும் பெண் ஷேக்ஸ்பியரை வாசித்தல் பற்றிய கற்பனை எவ்வளவு பிரமாண்டமானது! அந்த பிரமாண்டம் அன்று நிஜத்தில் நிகழ்ந்தது. Prince Hamlet பித்து மனநிலையில் யாரும் சுற்றி இல்லாத ஒருபொழுதில் உளறிய  to be, or not to be யை ஒப்புவித்துக் கொண்டிருந்தாள் ஜெனி. அவளுக்கு அந்தக் கணத்தில் அதை என்னிடம் கேட்கக் தோன்றி இருக்கலாம். அது அவளது மனநிலையை பிரதிபலிப்பதாக நான் எண்ணிக்கொண்டேன். நானோ மூலையில் நின்ற Ophelia யாவைப் போல இருப்பதாகத் தோன்றியது. ஒஃபிலியாக்கள் எப்போதும் குழப்பத்திலேயே இருக்கிறார்கள்.

To be, or not to be?

அன்றில் இருந்து பத்தாவது நாளில் நானும் ஜெனியும் ஒரேவீட்டில் வசிக்க ஆரம்பித்தோம். ஆரம்பிக்கையில் அந்த உறவு எனக்கு புதுச்செருப்பைப் போல இருந்தது. நான் பேச்சில் நடையில் கொஞ்சம் கவனமாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால் ஜெனி மிகச் சாதாரணமாக நடந்து கொண்டாள். அவளில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்கவில்லை. அவளைச் சந்திக்க அவளது முன்னால் காதலிகள் எல்லாம் சாதாரனமாக அந்த வீட்டுக்கு வந்து போயினர்.

நான் எனது மூன்றாவது நாவலில் அதுவரையில் எழுதி, மொழிபெயர்த்து வைத்ததை ஜெனி ஏற்கனவே எடிட் செய்து வைத்திருந்தாள். பத்து முறைகளுக்கு மேல் வாசித்துப் பார்த்திருப்பேன். கண்ணாடி துழைத்த சன்னம்போல இருந்தது. ஜெனியை கட்டிக் கொண்டழுதேன். ‘நீ உலகம் போற்றும் நாவலாசிரியையாய் வருவாய்’ என என் காதுகளில் முணுமுணுத்தாள். அந்த வார்த்தை மிகஅருகில், ஒரு அசரீரி போல எனக்குள் ஒலித்தது.

எனது வாழ்வில் ஜெனியின் வருகைக்குப் பிறகான பக்கங்கள் முற்றாக வேறு வண்ணங்களைக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியும் கூடலும் என்னை சற்றே மிதப்படுத்தி இருந்தது. நான் நாவல் வேலைகளுக்கு நடுவே சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன். அது சௌகரியமாக இருந்தது. நாவலை தொடர்ந்து எழுதுவதில் ஏதோ முடை இருப்பதைப்போல உணர்ந்தேன். ஜெனியும் நான் எழுதிய சில பக்கங்களை எடிட் செய்வதில் அசமந்தமாக இருந்தாள். காரணம் கேட்டபோது, நான் எழுதிய பக்கங்கங்களில் ரசமில்லை என நாசூக்காகச் சொன்னாள். அதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஆறுமாதங்கள் ஆயிற்று.

எனக்கு நாவல் எழுதுவதில் திருப்தி இல்லை என்கிற நிலையை அடைந்திருந்தேன். எங்கே பிழைக்கிறது என தேட ஆரம்பித்தேன். ஜெனி சொன்னது உண்மைதான்; இந்த ஆறுமாதத்தில் நான் எழுதிய எழுத்தில் வீரியம் குறைந்திருந்தது. தடத்தைவிட்டு விலகிய பல்வரிசை போல, புதிதாக எழுதி நிரம்பிய பக்கங்கள் துருத்திக்கொண்டு நின்றன. ஏன் இப்படி? என்கிற கேள்வி சதாகாலமும் என்னை அலைக்கழித்தது. அதன் தொடர்ச்சியாய், மகிழ்ச்சியான மனநிலையில் துயரத்தை பாடமுடியாது என்கிற முடிவை எட்ட எனக்கு இன்னும் மூன்று மாதங்கள் ஆயிற்று. நான் எழுதிய மூலப்பிரதியில் இருந்து சுமார் எண்பது பக்கங்களைக் கிழித்து எறிந்தேன். அது ஒரு பைத்தியகரமான மனநிலை. அந்த மனநிலையில் இருந்து வெளியேறும் வடிகால்களாக நான் எழுதிய சிறுகதைகள் அமைந்தன. நான் தொடர்ந்து சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். அவற்றையும் நானே மொழிபெயர்த்தேன். ஆனால் கதைகளை ஜெனி உடன் பகிர்ந்து கொள்வதில் ஏனோ எனக்கு ஆர்வமிருக்கவில்லை. என் கதைகளை வாசிப்பதற்கு வேறுஆள் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

அந்த நாட்களில் Russel Square வில் உள்ள  Skoob books ஒருங்கிணைத்த சிறுகதை கலந்துரையாடல்களை ஜெனிதான் எனக்கு அறிமுகப்படுத்தி இருந்தாள். British Library முற்றத்தில் திறந்தவெளியில் நடக்கும் கலந்துரையாடல் அது. பதிவு செய்யப்பட்ட சுமார் இருபத்தைந்து இலக்கிய ஆர்வலர்கள் கூடுவார்கள். கலந்துரையாடல் விவாதமாக சூடுபிடிக்கும். இலக்கியத்தின் தீவிர செயற்பாடுகளை கண்ணுறல் அலாதியாது. ஜெனிக்கு சிறுகதை மீது பெரிய ஆர்வமில்லாததால் அவள் அந்த விவாதங்களில் கலந்துகொள்வதில்லை. அவள் நாவல்களை மட்டுமே ரசிக்கக் கூடியவளாக இருந்தாள். நான் மட்டும் தொடர்ந்து அந்தக் கலந்துரையாடல்களில் பங்கெடுத்தேன். அங்குதான் கிரிஸ்டோபர் அறிமுகமானான். ஆறடியும் மூன்றங்குலமும் உயரங்கொண்ட மிகத்தீவிரமான இலக்கிய வாசகனும், விமர்சகனும். அவனுடன் என்னுடைய சிறுகதைகளை பகிர்ந்துகொள்வதில் எனக்கு சிக்கல்கள் இருக்கவில்லை. அப்படியாக நான் கொடுத்த பத்துக்கதைகளில் இரண்டு கதைகளை  Paris Review விற்கு அனுப்புவதாகச் சொல்லி வாங்கி வைத்துக்கொண்டான். ‘தாளில் எழுதுவதை எப்போது நிறுத்தப்போகிறாய்? கணினியில் எழுதுவதில் அப்படி என்ன பிரச்சனை?’ என அவன் கேட்டபோது ‘நான் old school’ எனப் பதில் சொல்லி கண்ணைக் சிமிட்டிக்கொண்டேன்.

இந்தாண்டு வசந்தகாலம் ஆரம்பித்தபோது  ‘இலை உதிர்காலம் ஆரம்பிக்கும் முன்னர் நாவலை முடித்துவிடுவது’ என திட்டம் கொண்டேன். கதையின் நாயகியான நாவலாசிரியை லண்டனில் ஒரு பெண்ணைச் சந்திப்பதாக புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது. பக்கங்கள் நிரம்பி வழிந்தன. எழுத்து மடை திறந்து பாய்ந்தோடிற்று. மடை மறித்து பாத்திகட்டி அத்தியாயங்கள் கட்டி எழுப்பப்பட்டன. ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் அவற்றை உடனே மொழிபெயர்த்தும் வைத்தேன். இருபதே நாளில் நாவலை முடித்து  ‘நின்கூடுகை’ எனத் தலைப்பிட்டு மூடி வைத்தபோது மனசை அழுத்தி இருந்த பெரும் பாராங்கல் விலகி உருண்டோடி பள்ளத்தில் விழுந்ததைப்போல பெரும் ஆசுவாசமாக இருந்தது. ஒரு பெருங்கனவின் முகவுரை இந்த நாவல். அந்தக் கனவின் வாசலை மூட இருந்த எல்லாவற்றில் இருந்தும் நான் ஒதுங்கி வந்தேன்.ஒரு தேவதையைப் போல ஜெனி வந்தாள். ஆங்கிலத்தில் இந்த நாவலை எழுத வைத்து என் கனவை இன்னும் அகலமாக்கி வைத்தாள். இந்த நாவலை ஜெனிக்கு சமர்ப்பிப்பதாக எழுதி வைத்தேன்.முறுக்கி விட்ட நீர்த்திவலைகள் போல சிலிர்த்த உடலை சிலுப்பி விட்டுக்கொண்டேன்.மூச்சை நன்கு இழுந்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஏதாவது புகைக்கவேண்டும் போல இருந்தது.

இனி நாவல் எழுதுவதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தேன். ஏதாவதொன்றில் இருந்து முற்றாக விலகிவிட, எப்போதும் ஏதோவொரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.

கோடைவிடுமுறையில் பிரான்ஸ் போன ஜெனி, A4தாளில் சுமார் ஆயிரம் பக்கங்களுக்கு என் கைப்பட எழுதப்பட்ட ‘நின்கூடுகை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பை பொதிகட்டி அவளது பிங்க் நிறப்பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றாள். ஒருமாதம் தங்கி நாவலை முற்றாக எடிட் செய்து முடித்த பின்னர்தான் வருவதாகச் சொல்லி இருந்தாள். இடையில் ஒருமுறை போனில் அழைத்து மொழிபெயர்ப்புப் பணி நினைத்ததை விட வேகமாகவும் சிறப்பாகவும் வருவதாவும்,

 ‘நீ பெரும் எழுத்துக்காரி, இந்த உலகம் உன்னைக் கொண்டாடும்’ எனவும் உற்சாகம் ததும்பச் சொன்னாள். அவளது பேச்சில் நாணயமும், அவளது உணர்ச்சிகளில் உண்மையும் இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

மூன்று வாரங்கூட ஆகி இருக்கவில்லை. நேற்று அதிகாலை மூன்றுமணி இருக்கும்; எனக்கு இன்பதிர்ச்சி தருவதற்காகவோ என்னவோ, என்னிடம் அறிவிக்காமல் வீட்டிற்கு வந்தவள் எங்களுடைய கட்டிலில் நானும் கிரிஸ்டோபரும் அம்மணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள். இழுத்துவிடப்பட்ட கஞ்சாபுகை அந்த அறையை முற்றாக நிரப்பி இருந்தது. உறைந்து நின்ற ஜெனி ஒரு வார்த்தை பேசவில்லை. பையைத்திறந்து கட்டாக இருந்த பேப்பர்களை எடுத்தாள். ஒருமுறை என்னையும் பேப்பரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டாள். ஏதோ முடிவிற்கு வந்தவளைப்போல, தலையை ஆட்டினாள். கிரிஸ்டோபர் மெல்ல எழுந்து ஆடைகளை அணிந்துகொண்டு தனக்கெதுவும் தெரியாது என்பதைப்போல நழுவிப் போனான். ஜெனி நிதானமாக நடந்து முன்னறையின் ஜன்னலைத் திறந்து கையில் இருந்த பேப்பர்களை நாலாபுறமும் விசிறி அடித்தாள். அந்தக் கட்டடத்தின் பதினெட்டாவது மாடியில் இருந்து வெள்ளைத்தாள் மழை பொழிந்தது. நான் அசைவற்றுக் கிடந்தேன். தன் செய்கையில் தீவிரமும் அதேநேரம் நிதானமும் கொண்டிருந்த ஜெனி, எனது அலுவலக மேசையில் இருந்த பெட்டியில் இருந்து  ‘நின்கூடுகையின்’  தமிழ் மூலப்பிரதியையும் மேலும் சில சிறுகதைகளின் பிரிதிகளையும் எடுத்து வானில் விசிறி அடித்தாள். மின்னொளியில் வெள்ளைப்பறவைகள் போல மிதந்த அந்தக் காகிதங்களுக்கு இனி எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை. 

‘Good night ஷர்மிளா. எனக்கு டயர்டா இருக்கு நான் தூங்கப்போறன்’ என்றவள் எதுவும் நடக்காததுபோல தூங்கப்போனாள்.

ஷேக்ஸ்பியரின் to be, or not to be, ஜெனியின் குரலில் என் காதுகளை செவிடாக்கிக் கொண்டிருந்தது.

‘Good night ஜெனிபர்’.

குருவி, தலையை நீட்டி பதினொரு முறை கத்தியது. ஜன்னல் திரைச்சீலையை விலக்கி பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது பிங்க் நிறப் பெட்டியை உருட்டிக்கொண்டு, வீதியில் பரவிக் கிடந்த வெள்ளைத் தாள்களை மிதித்து நடந்து கடந்து போய்க்கொண்டிருந்தாள் ஜெனி.  

15:32

08/07/2018

22,Bishopsgate

London

London

கிருமி (சிறுகதை)

01.
நான் கேட்டு நீங்கள் எதையும் வாங்கித்தராமல் இருந்ததில்லை வாப்பா. உங்களால் முடியாமல் இருந்த போதும் கூட நீங்கள் எனக்கான எதையும் செய்யாமல் இருந்ததில்லை. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா வாப்பா, ஐந்தாவது படிக்கிற போது கல்விச் சுற்றுலாவிற்கு பணங்கொடுக்கும் திகதி தவறிப் போனது. அப்போது நீங்கள் பாடசாலைக்கு வந்திருந்தீர்கள். ஆசிரியரிடம் உங்களது மகனுக்காக பரிந்து பேசுவதற்காக. அன்று உங்களது உடல்மொழியில் இருந்த பணிவு, எனது பிடரி நரம்பை விட அண்மையில் இருப்பது போல எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது வாப்பா.

வாப்பா நீங்கள் எவ்வளவு அழகானவர், உடலால், செயலால், நீங்கள் எவ்வளவு அழகானவர்! உங்களது செயல்கள்தான் எவ்வளவு நேர்த்தியானது! எல்லாவற்றையும் செய்ய உங்களுக்கு ஒரு முறைமை இருந்தது, ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைத்த பாசிமணி போல. நீங்கள் தவறியும் அந்த முறைமையில் இருந்து தவறியவரில்லை. ஆயினும் மெய்யான காரணங்களுக்காக அந்த முறைமையை நீங்களாகவே மாற்றிக்கொள்வீர்கள். அதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இருந்ததில்லை.

சொல்வயப்பட்டவனின் வாய்ச்சொல்.

இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றிவிட்டது இறக்கிற உடல்களை எல்லாம் எரிக்கத்தான் வேண்டுமென. விஷேட வர்தமானி அறிவித்தல் மூலம் அதை நடைமுறைப் படுத்தி விட்டார்கள். கொரோனாவால் இறப்பவர்களை மட்டுமா அல்லது எல்லா இறப்பையுமா என்பதைப் பார்க்க வேண்டும். அடுத்த தேர்தலுக்கான எல்லா அடிப்படைகளையும் இந்த அரசு தயார்படுத்தி விட்டது. சிங்கள மக்கள் மிகப்பெரும் பெரும்பான்மை ஒன்றை சிங்கள அரசுக்கு வழங்குவார்கள். அங்கிருந்து இரண்டு மார்க்கங்கள் இந்த அரசிக்கு முன்னால் இருக்கும்.

யமுனா ராஜேந்திரனின் ஐந்து நூல்கள் மீதான அறிமுகம்

லன்டனில் பெரும்பாலான கலை இலக்கிய நிகழ்வுகள் கிழக்கு லன்டனை மையப்படுத்தியே நடைபெறுவது வழமை. பெரும்பாலான தமிழர்கள் அங்கே வசிக்கிறார்கள் என்பதும் ஏற்பாட்டுக்குழுவின் பலரும் அங்கே இருக்கிறார்கள் என்பதுவும், காரணமாக இருக்கலாம். மேற்கு லன்டனிலும் தமிழர்கள் பரவலாக வசிக்கிறார்கள். குறிப்பாக rayners lane, pinner, harrow பகுதிகளில் அதிகமாக தமிழர்கள் பரம்பி இருக்கிறார்கள். நானும் மேற்கு லன்டன்வாசி என்ற வகையில், இலக்கியக் கூட்டங்கள் இங்கே ஒருங்கிணைக்கப்படுவது குறித்து எனது எண்ணங்களை ஏற்கனவே முகநூலில் எழுதி இருக்கிறேன்.  ‘எதிர்’ அமைப்பினர் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்கின்றனர் என்பதில் மகிழ்ச்சி. அந்த வகையில் அவர்களின் புத்தக அறிமுகங்களின் முதல் நிகழ்வாக யமுனா ராஜேந்திரனின் ஐந்து நூல்கள் மீதான அறிமுகமும் கலைதுரையாடலும் நேற்று 22 மாசி 2020யில் Rayners Lane யில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Continue reading

Cass – முன்னுரை

அர்த்தங்களிலிருந்தான விடுதலை

கடைசியில் அது நிகழ்ந்துவிட்டது. இப்படியான ஒரு தொகுப்பு வருவது பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருந்த ஒரு இலக்கிய உபாசகனை, எழுத்தாளனாக உலகுக்கு அறிமுகப்படுத்தும் இந்த முதலாவது தொகுப்பை, ‘யாவரும்’  ஜீவகரிகாலன் தனது விடாத முயற்சியால் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் புத்தகம் 2017ம் ஆண்டே வந்திருக்க வேண்டியது. ஜீவகரிகாலன் முனைப்பாக இருந்தார். நான்தான் ஆர்வங்காட்டவில்லை. 2018யிலும் அதே கதைதான். 2019யில் விடாப்பிடியாக என்னிடம் இருந்து கதைகளை வாங்கிக் கொண்டார். அப்போது அவரிடம் சொன்னதுதான்; வெளியில் இருக்கும் ஒரு வாசகனை சந்திப்பதைவிட, எனக்குள் இருக்கும் வாசகனுக்கு முன்னால் எனது படைப்புகளை கொண்டு வைப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன். எனக்காகவே எழுதி, நானே வாசித்து, விமர்சித்து கடந்துபோகிற ஒருநிலை, எனக்குள் எப்போதும் பெரும் ஆசுவாசத்தைத் தருவதாக உணர்கிறேன். இந்த ஒற்றைக் காரணத்துக்காகவே, எனக்காக மட்டுமே எழுத விரும்புகிறேன். 2017, சென்னை புத்தகச்சந்தைக்கு வந்திருக்க வேண்டிய இந்தத் தொகுப்பு, மூன்றாண்டுகள் கழிந்து 2020யில் வெளிவருவதற்கான காரணமும் இதுதான். (2019யில் நான் எழுதிய எந்தக் கதைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெறவில்லை). இந்த இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொருமுறை பேசுகிற போதும் எனது தொகுப்பை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என ஆர்வங்காட்டிய ‘யாவரும்’ ஜீவகரிகாலனுக்கு எனது அன்பு.

பேராசான் ரோலான்ட் பார்த் சொல்வதைப் போல உலகை விமர்சிப்பதும், கேள்விக்குள்ளாக்குவதும் மட்டுமே கலையின் பணியாக இருக்குமேயானால், அவற்றின் எல்லைகளில் பெருங்குரலெடுத்து ஓலமிட்டுப் பறந்து திரிகிற ஒரு பெருமுயற்சிதான் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் என இலகுவில் சொல்லிவிட முடியும். அதைத்தாண்டி வேறொன்றும் இந்தத் தொகுப்பில் இல்லை.

Czeslaw Milosz

01_A Task

In fear and trembling, I think I would fulfill my life
Only if I brought myself to make a public confession
Revealing a sham, my own and of my epoch:
We were permitted to shriek in the tongue of dwarfs and
demons
But pure and generous words were forbidden
Under so stiff a penalty that whoever dared to pronounce one
Considered himself as a lost man.

ஒரு பணி

பயந்து நடுங்கிக் கொண்டாவது, நான் என் கடமையை நிறைவேற்றுவேன் என்று நினைக்கிறேன்
அதுவும் ஒரு பகிரங்க வாக்குமூலம் அளிக்க நான் முன் வந்தால் மட்டுமே
எனதும், எனது சகாப்தத்தினதுமான ஒரு மோசடியை வெளிப்படுத்த;

குள்ளர்கள் மற்றும் பேய்கள் போல கூச்சலிட நாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தோம்
ஆனால் தூய்மையான மற்றும் காருண்யமான வார்த்தைகள் தடை செய்யப்பட்டன
அதில் ஒன்றை உச்சரிக்கத் துணிந்தவர் மிகக் கடுமையான தண்டனையின் கீழ்
தன்னையே இழந்தவராகக் கருதப்பட்டார்.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

ஒரு கவிஞனுடைய துணிச்சல் என இந்தக் கவிதையை நான் புரிந்துகொள்கிறேன். ஒரு பெரும் பணி தலைக்குள் ஏறியது போலொரு உணர்வு. அதுவும் 2019ம் ஆண்டுக்கான சனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து, முடிவுக்காக காத்திருக்கும் இந்த இரவில், லன்டன் குளிரில் விறைத்தபடி ஏற்ற சபதமாக இந்தக் கவிதையை வாசிக்க முடிந்தது தற்செயலானதல்ல.

Bretole Brecht

01_I Want To Go With The One I Love

[Original]

Ich will mit dem gehen, den ich liebe.
Ich will nicht ausrechnen, was es kostet.
Ich will nicht nachdenken, ob es gut ist.
Ich will nicht wissen, ob er mich liebt.
Ich will mit ihm gehen, den ich liebe.

[Translation]

I want to go with the one I love.
I do not want to calculate the cost.
I do not want to think about whether it’s good.
I do not want to know whether he loves me.
I want to go with whom I love.

தமிழ் மொழிபெயர்ப்பு

நான் காதலிப்பவளோடு வாழ (பயணிக்க) விரும்புகிறேன்.
சேதாரங்கள் பற்றி நினைப்பதற்கில்லை.
நல்லது கெட்டது பற்றியும் அக்கறை இல்லை.
அவள் என்னை காதலிக்கிறாளா இல்லையா என்பது பற்றியும்தான்.
நான் விருப்புபவர்களோடு நான் வாழ நினைக்கிறேன்.
00

ஜேர்மன் மொழிதெரிந்தவர்கள் மூலத்தோடு ஆங்கிலத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். நான் தமிழில் மொழிபெயர்கிற போது எனது வசதிக் கேற்ப பால் வேறுபாட்டை மாற்றிக்கொண்டேன். ஒருவேளை மூலத்தில் he என ஆங்கிலத்தில் உள்ள இடங்களில் she எழுதப்பட்டிருக்கலாம் என்கிற நப்பாசையும் உண்டு. Bretole brecht போன்ற மஹாகவிகளை வாசிப்பது எவ்வளவு இன்பமானதோ அதே அளவிற்கு ஆசுவாசமானது நமக்கு வசதியாக வார்த்தைகளை மாற்றி அந்தக் கவிதைகளை நமது மொழியில் எழுதிப் பார்ப்பதும்.

02_Future Generations

I confess this:
I have no hope.
The blind talk about an escape.
I see.
When the errors are consumed
The nothing will sit next to us
as our last companion.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
Den Nachgeborenen
Ich gestehe es:
Ich habe keine Hoffnung.
Die Blinden reden von einem Ausweg.
Ich sehe.
Wenn die Irrtümer verbraucht sind
Sitzt als letzter Gesellschafter
Uns das Nichts gegenüber.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

நான் இதை ஒப்புக்கொள்கிறேன்:
எனக்கு நம்பிக்கையில்லை.
குருடன் தப்பிப்பது பற்றிப் பேசுகிறான்.
எனக்குத் தெரிகிறது.
தவறுகள் நீங்கும் போது
எங்களை வெறுமை சூழ்ந்திருக்கும்
நமக்கான கடைசி பற்றுதலாக.

Murakami

01_Killing commorate கிட்டத்தட்ட 800 பக்கங்கள். கையில் எடுத்துப் பார்த்தால், சட்டி நிறைய இருந்த மட்டன் சுக்கா முகத்தில் அடித்தது போல இருந்தது. வாங்காமல் வந்துவிட்டேன். மனது கேட்கவில்லை. என்னவோ போல இருந்தது. சரி ஏதாவது செய்வோம்னு Amazon யில் மேய்ந்தால், Vintage mini பதிப்பாக முரகாமியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை desire எனுந் தலைப்பில் புத்தகம் போட்டிருக்கிறார்கள். பக்கட் நாவல் சைஸ்ஸில். அன்று சமைந்த பெண்போல வெட்கப்பட்டு குந்தி இருந்தது. பெருங் காதலுடன் வாங்கி விட்டேன். படுக்கையில் இருந்துகொண்டே சிறுகதைககளுக்காக முரகாமியை காமுறல் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அதிகாலையில் கனவில் வந்திருந்த ஜெயமோகன் புத்தகத்தை கையில் எடுத்து பார்த்துவிட்டு, பலேன்னார்.

Starry Night

வான்கோவின் Starry Night ஓவியத்திற்கு முன்னால் நிற்பதைக் கற்பனை செய்து பாருங்கள். பிரான்சின் அந்த நகரம் வான்கோவின் வைத்தியசாலை அறையின் அந்த ஐன்னல் சட்டகத்தின் ஊடே பிரமாண்டமாக விரிவதையும் கற்பனை செய்யுங்கள்.
இன்னமும் பௌதீக விதிகளால் விளக்க முடியாத theory of turbulence பற்றி உங்களைக்கு என்ன தெரியும்! இந்த ஓவியத்தை ஊற்றுப் பாருங்கள் சுழிகளாக விரிகிற வான்கோவின் இந்த ஓவியம் உங்களுக்குள் எழுப்புகிற திறப்புகள்தான் சூழிக்கொள்கையின் அடிநாதம். ஆனால் பௌதீகம் இதை இன்னமும் ஆராய்கிறதாம்.

மனப் பிறழ்வுகொண்ட ஒருவனின் அகவிரவுதான் இந்த ஓவியம் என சாபு சார் இந்த ஓவித்தைக் குறித்து 2011 யில் என்னிடம் சொன்னார். வான்கோவிற்கு அவர் வரைந்த எந்த ஓவியமும் திருப்தி தராததைப் போல, இந்த ஓவியமும் பிடிக்கவில்லை. இந்த ஓவியத்தைப் பார்த்த தியோவும் அதைத்தான் வான்கோவிற்கு சொல்கிறான். ஆனால் இந்த ஓவியம் வான்கோவின் மிகச் சிறந்த ஓவியம் என இன்றைக்குக் கொண்டாடுகிறோம்.

தன் வாழ்நாளில் ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே விற்க முடிந்த தூரதிஷ்டம் கொண்ட ஒருவனாக மாண்ட ஒரு மகத்தான ஓவியனின் இறப்பில்தான் எத்தனை எத்தனை யூகங்கள். தற்கொலை செய்து கொண்டான் என்கின்றனர். சிறுவன் சுட்டான் என்கின்றனர்.. இப்படி பல கதைகள்.

சாபு சேரும் இப்படித்தான் ஒருநாள் இறந்து போனார். காரில் தனியே பயணிக்கிற போது, சவுதியின் பாலைவன வீதியில் வைத்து ‘விபத்தொன்றில்’ நாயைப் போல அடித்துக் கிடந்தார். துண்டும் துணியுமாக புறக்கிக் கொண்டுவந்தார்கள். இன்றோடு நான்கு வருடமாயிற்று…. கடைசி வரைக்கும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாலு பெண்களுக்கு அண்ணன். சாபு சாரின் வாப்பா மௌதாகும் போது சாபு மோனுக்கு வயது 14. 42 வயதில் அவர் மரணிக்கிற போது மூனு தங்கச்சி மாரை கல்யாணங்கட்டி கொடுத்திருர்தார்.

வீட்டில் இருக்கும் Starry night ஓவியத்திற்கு முன்னால் நிற்கிறேன். ஓவியம்தான்.. ஆனால் வெறும் ஓவியம்தானா?

பொய்யே எனும் இடை

தோழி கம்பராமாயணம் படிக்கிறாள். நிறைய விவாதித்துக்கொள்வோம். நேற்றிரவு ‘எல்லாம் சரி, மொத்த கம்பராமாயணத்திலும் எந்தக் காண்டம், எந்தப் பாடல் உனக்கு பிடிக்கும் எனக் கேட்டால், உன்னால் பதில் சொல்ல முடியுமா?’ ன்னு கேட்டாள்.

கங்கை படலம் எனக்கு எப்போதுமே விசேசம். அயோத்தியா காண்டத்தில் வரும் பகுதி. ராமனை வரவேற்க மிதிலையில் மரங்கள் தன் இலைகளை காற்றில் ஆட்டின என பொருள்பட கம்பன் முன்னரே எழுதி இருப்பான். வில்லுடைத்து பெண்ணுடைத்து திருப்பி வருதல் கம்பனின் ஆடுகளம். நின்று விளையாடிருப்பான் பாட்டன். போலவே கம்பன் தன் இளையான் இலக்குவனோடும் இணையாள் ஜானகியோடும் காடுபுகுதல் கம்ப ராமாயணத்தின் உச்சம்.

வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் –
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.

ராமனின் ஒளி கண்டு சூரியனே மறைந்ததாம். கம்பன் எழுதியது இது. பின்னர் ஒருநாளில், சூரியனுக்கும் வெய்யோன் எனப் பேர் உண்டு என பெரியப்பா இந்தப் பாடலை வேறு விதமாகவும் விளக்கி இருந்தார். அது அற்புதம்

பொய்யோ எனும் இடையாளோடு என சீதையை விளிக்கிறான் கம்பன். என்னா ஒரு மொழி ஆளுமை!

கம்பன் ராமனைக் கண்டவனில்லை. ஆனால் அவனது கற்பனையின் உச்சத்தில் அவனது தமிழின் இயலாமையை ஐயோ இவன் வடிவு எனக் கத்தி ஏற்றுக்கொள்கிறான்.

அதன் தொடர்சிசியாய் சீதையை வருணிக்கும் இடங்கள்…

சீதை கங்கையில் குளிக்கிறாள்; வஞ்சி நாண இடைக்கு எனத் தொடங்கும் அந்தப் பாடல்

சீதையின் கூந்தல் கங்கையை நிறைப்பதை எழுதிய மங்கை வார்குழல் எனத் தொடங்கும் பாடல்… இதை எல்லாம் படித்துவிட்டுத்தான் மகளுக்கு பூங்குழலி எனப் பெயரிட்டேன்.

இதை எல்லாம் சொல்லி, கங்கை படலம் மனதுக்கு மிக நெருக்கமானது. அந்தப் பாடல் நெஞ்சை நிறைத்து நிற்பவை எனச் சொல்லி முடித்தேன்.

‘உமை, ஐ லவ் யூ’
எனச் செய்தி அனுப்பினாள். அப்போது நாங்கள் பேசி முடித்து இரண்டு மணி நேரமாவது ஆகி இருக்கும்.
00

தமிழ் உங்களுக்கு என்ன தந்தது எனக் கேட்பவர்களுக்கு…